December 15, 2011

நடுநிலையாளர்கள் கவனத்திற்கு...


மூணாறு
மூணாற்றில் இன்று ஒரு முக்கியமான ஊர்வலம் நடந்திருக்கிறது. ஆர்ப்பாட்டமும் நடந்திருக்கிறது. அது... மூணாறு வாழ்த் தமிழர்கள் நடத்திய ஊர்வலம். ஆர்ப்பாட்டம். 

நடத்தியவர்கள் : 

(இன்றைய கேரளம் வாழ்த்) தமிழர்கள். தோட்டத் தொழிலாளர்களாகவும், தானி ஓட்டுநர்களாகவும், சிறு வணிகர்களாகவும் ஜீவிக்கும் தமிழர்கள்.

கோரிக்கை :

பொது வாக்கெடுப்பு நடத்தி, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இடுக்கி, மூணாறு, வண்டிப்பெரியார், உடுமஞ்சோலை, தேவிகுளம், பீர்மேடு முதலான பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும்.

காரணம் : 

கேரள அரசின் நலத்திட்டங்கள் எதுவும் இடுக்கி மாவட்டம் வாழ்த் தமிழர்களுக்குச் சென்று சேர்வதில்லை. பல்வேறு விதங்களில் இனக் காழ்ப்போடு தமிழர்கள் நடத்தப்படுதல். முல்லைப் பெரியாறு விவகாரத்திலும் கேரளத்தின் நிலைப்பாட்டை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும் என்று மலையாளிகளால் மிரட்டப்படுதல்.

இருக்கும் தங்கள் உயிருக்கும், உடைமைக்குமே ஆபத்து எனும் நடப்புச் சூழலிலும் தைரியமாக வந்து போராடியிருக்கும் மூணாறு வாழ்த் தமிழர்கள் உண்மையிலேயே பாரட்டுக்குரியவர்கள்.

(1950-களில், மொழிவழி மாகாணப் பிரிவினை சமயத்திலேயே எழுந்த குரல் இது. தேவிகுளமும் பீர்மேடும் தமிழகத்துடன்தான் இணைக்கப்படவேண்டும் என்று ம.பொ.சி. குரல்கொடுத்தார். ஆனால்,  'குளமாவது, மேடாவது, எல்லாம் இந்தியாவுக்குள்ளதானே இருக்குண்ணேன்' என்று பெருந்தன்மையோடு பேசினார் பெருந்தலைவர். 'பணிக்கர் பேசினார், அங்கு மலையாளிகள்தான் அதிகம், கேரளத்தோடுதான் சேர்க்கணும்னு சொன்னார். சரின்னுட்டேன்' என்றார் பெரியார். பெருந்தன்மையாலேயே கெட்டானே தமிழன் என்பது இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது.) 

- யுவபாரதி 

2 comments:

Siraju said...

தோழர் உங்கள் கவனத்திர்க்கு....

ஓட்டம் பிடித்தார், ம.பொ.சி.! மலையாளிகளை துணிவுடன் எச்சரித்தவர் பெரியார்!!

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17589:2011-11-29-21-12-02&catid=1392:2011&Itemid=641

Yuvabharathy Manikandan said...

அந்த கட்டுரையை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன். எல்லா பிரச்சினைகளிலும் பெரியார் மட்டுமே சரிவரக் கவனம் செலுத்தினார், மற்றவர்கள் அப்படி இல்லை என்பதான ஒரு வழிபாட்டுப் பண்பு கொண்ட அதுபோல பல கட்டுரைகளை நீங்கள் பார்க்க முடியும். பெரியாரை ஒரு சர்வரோக நிவாரணி மாதிரி பயன்படுத்துகிறார்கள். அது சரியில்லை. பெரியாரின் சிந்தனைகளை முழுமையாகப் படித்தவர்களுக்கு ஒன்று தெரியும். அவர் தமது தலையாய பணியாகக் கருதிச் செய்தது எவற்றை என்று. சமூக நீதிக்கும், பிற்படுத்தப்பட்டோர் எழுச்சிக்கும் பெரியாரின் பங்கு மகத்தானது.

தமிழக எல்லைப் போராட்டங்கள் குறித்து அறிந்தவர்களுக்கு அவற்றில் பெரியாரின் பங்கு எந்தெந்த அளவுக்கு இருந்தது என்பது நன்கு தெரியும். ம.பொ.சி., தளபதி கே.வினாயகம், பி.எஸ்.மணி, நேசமணி, நத்தானியல், போன்ற பலரது பணிகள் குறித்தும் நாம் அறியவேண்டும். நம் முன்னோர் பலரிடமிருந்தும் நமக்குத் தெரியவேண்டியவை பல. வாசிப்போம். விவாதிப்போம்.