October 12, 2010

மனங்களின் அன்பையும் அவஸ்தைகளையும் மனதில் படரச் செய்யும் நீர்வாசம்

- சா.முகில்

நன்றி: வடக்கு வாசல் ஜனவரி 2007

எது கவிதை என்பதைக் கடந்து, கவிதை புரியுமா? என்பதைக் கடந்து, ஒரு தீவிர வெளிப்பாட்டுத தன்மையை நோக்கி போய்க் கொண்டிருக்கிற சூழல் இன்றைய கவிதைச் சூழல். அதன் நோக்கில் 90கள் தொடங்கி இன்றைய வரையில் கவிஞர்களாக இயங்கிய பலர் தொகுப்புகள் போடாத காரணத்தால் வெளி தெரியாமலேயே இருக்கின்றனர். அந்த அழகிய கவிஞர்களின் கூட்டத்தில் இருந்து வரவேற்கக் கூடிய ஒருவராக மணிகண்டன் நீர்வாசம் தொகுப்பைக் கொண்டு வந்திருக்கிறார்.

வாழ்வின் ஒவ்வொரு நிமிடங்களையும் கூட நேசிக்கத் தெரிந்திருந்த காலங்களாகவே இவருடைய காதல் கவிதை வெளிகளை அணுக முடிகிறது. ஞாபகத் தடங்களை கோடிட்டுக் காட்டுவதில் பெண்களது இருப்பு வெளிகளின் வேதனைகளை சுட்டிக் காட்டுகிறார். பெண்களது பயணங்களில் நண்பர்கள், தோழிகள் என்பது பயணச் சீட்டுகளாகவே காணாமற் போகின்றதை


"தீண்டாத நண்பனென
அகாலத்தில் விழிக்கிறது
மெளனம் பாரித்த
மழை"

என்ற வரிகள் வாயிலாக இத்தகு வெளிகளை உள்வாங்கிக் கொள்ள முடிகின்றது.

பொதுவாக நிலத்திற்கும் பெண்ணிற்குமான வரலாற்று வெளிகளை எடுத்துக் கொண்டோமானால் ஓர் புனைவாக்கம் ஓடுகின்றதை பார்க்கலாம். கவிஞர் ஒரு கவிதையில்,

"கொசுவம் சொருகி
குனியும் வரையில்
குழப்பமற்றிருந்தது
நிலம்"

என பதிவாக்கிச் செல்கிறார்.

உலகமயமாக்கல் சூழலில் நிகழ்ப் போக்குகளை எதிர் கொள்வதில் வரும் உள நெருக்கடிகளை கவிதைகளில் பதிவு செய்திருக்கிறார்.

தொகுப்பு முழுக்க யதார்த்தமான கவிதைகளாகவே வந்திருக்கின்றன. அழகியல் வெளிகளிலும் யதார்த்தமான

"ஒற்றை நுரை
துண்டு துண்டாய்
சிதறுகிறது வானம்" (ப.21)

என்பதில் கட்டமைப்பு இழையோடியிருக்கின்றது. இயற்கை சார்ந்த வெளிகளில் பொதுவாக வாழ்ந்த பகுதிகளே வசப்படுத்தப்பட்டிருக்கின்றன. சாத்தனூர் அணை - 1, 2, திப்பக்காடு போன்றவைகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான படிமக் குறிப்பில் புனைவாக்கத் தெறிப்பு தென்படுகின்றன. குறிப்பாக சிவகங்கை தீர்த்தம், ப்ரிய மீரா கவிதைகளைச் சொல்லலாம். எளிமையான சொல்நடையில் மனித மன அவஸ்தைகளை பதிவாக்கியிருந்தாலு, ஒரு தனி மனிதனுக்கான ஒடுக்குமுறைகள், தீண்டாமை போன்ற சமூக அவலங்களை கவிதை மேலும் கவனத்திற்கு உட்படுத்தியிருக்கலாம். படைப்பாளி அதனை கவிதைகளில் தனது அனுபவப் பகிர்வாக

"நிமிர்ந்து
வெறித்து
அக்கம் பக்கம் அருவெறுத்து
சுயவதையுடன் நகரும்
வழக்கமாய் என் பொழுது"


என்ற வரிகளில் உளவியலின் வலியாக அதனை உள்வாங்கிக் கொள்ள முடிகின்ற தோய்ந்த நேசிப்புகளினது உண்மை முகங்கள் என்ன என்பதை அவருடைய மேலான கவிதை வரிகளில் காணமுடிகின்றது. தொகுப்புரை வழங்கியிருக்கும் தோழர் ஸ்டாலின் இக்கவிதைகளைப் போலவே மிகவும் நெகிழ்வாகப் பேசியிருக்கிறார். தொகுப்பின் தலைப்பு, நீர் வாசம், அதற்கேற்ப செந்தில் செல்வனின் நெய்வண்ண ஓவியம், கவிதையின் சிறு உலகத்தைப் போன்றே கையடக்கமான ஹவியின் வடிவமைப்பு போன்றவை இத்தொகுப்புக்கு கூடுதல் நேர்த்தியை வழங்கியிருக்கிறது.

தொடர்ந்து மனங்களில் பரவும் நெகிழ்ச்சியின் நீர் வாசம்.

No comments: