August 24, 2013

வீட்டுலகம்


கதவு சன்னலற்ற வீட்டில்
நான் மட்டும் வாழவில்லை

பகல் புலர் வேளை
எறும்பு வருகிறது
பசி மறந்த எம் உணவு கவ்வி
படை காட்டி நடக்கிறது

பகல் உலர் வேளை
குளவி வருகிறது
ஒலி மறந்த எம் காது குடைந்து
ரீங்காரம் தூவிப் பறக்கிறது

பகல் உதிர் வேளை
கொசு வருகிறது
உடல் மறந்த எம் குருதி உண்டு
இருள் வெளியில் மறைகிறது

இரவு புலர் வேளை
பல்லி வருகிறது
தரை விதானம் பக்கச் சுவரென்று
என்னையும் சுமந்து ஊர்கிறது

கதவு சன்னலற்ற வீட்டில்
நான் மட்டும் வாழவில்லை.


-    யுவபாரதி

No comments: