எதிர்நின்று இறைஞ்சுகிறார்கள்
கைகூப்பிக் கேட்கிறார்கள்
மனதுக்குள் இருப்பது
நம்பிக்கையா சலிப்பா
ஓரக்கண்ணால் தன்னைக் கண்டபடி
நந்தியின் விடைத்த காதில்
என்ன இரகசியம் இவர்களுக்கு
ஆயாசமாயிருந்த அரன்
அர்த்தமண்டபம் வெறிச்சிட்டதும்
கேட்டே விட்டான்
நந்தியின் மௌனத்தால்
அழுக்காறு மீதுற
கண்ணுதல் சினந்து காட்டினான்
இவர்களுக்கு அணுக்கமாய்
வெளியே இருக்கிறேன்
கதவடைத்துக் கொண்டு
கருவறைக்குள் உறையவில்லை
வால்சுழற்றி நகைத்துரைத்தது
நந்தி
கண்ணுதலோடு கதவும்
மூடிக்கொண்டது.
No comments:
Post a Comment