June 02, 2016

உத்தரகோச மங்கை

எதிர்நின்று இறைஞ்சுகிறார்கள்
கைகூப்பிக் கேட்கிறார்கள்
மனதுக்குள் இருப்பது
நம்பிக்கையா சலிப்பா
ஓரக்கண்ணால் தன்னைக் கண்டபடி
நந்தியின் விடைத்த காதில்
என்ன இரகசியம் இவர்களுக்கு

ஆயாசமாயிருந்த அரன்
அர்த்தமண்டபம் வெறிச்சிட்டதும்
கேட்டே விட்டான்
நந்தியின் மௌனத்தால்
அழுக்காறு மீதுற
கண்ணுதல் சினந்து காட்டினான்

இவர்களுக்கு அணுக்கமாய்
வெளியே இருக்கிறேன்
கதவடைத்துக் கொண்டு
கருவறைக்குள் உறையவில்லை
வால்சுழற்றி நகைத்துரைத்தது
நந்தி

கண்ணுதலோடு கதவும்
மூடிக்கொண்டது.

No comments: