January 06, 2010

எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் கடிதம் 10.11.99

151, கே.பி.சாலை,
நாகர்கோவில்-629 001.
10.11.99.


அன்புள்ள மணிகண்டன் அவர்களுக்கு,

வணக்கம். உங்கள் 6.11.99 கடிதம் இப்போது கிடைத்தது. உங்களை நான் நன்றாக நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னிடம் காட்டிய தோழமையும், காஞ்சிபுரத்திலிருந்து நாம் திருவண்ணாமலைக்கு ஒன்றாக வந்த அனுபவமும் ஒருநாளும் மறக்கக் கூடியவை அல்ல.

அன்று எடுத்த புகைப்படங்களை அனுப்பித் தந்ததற்கு நன்றி. நான் திருவண்ணாமலை வந்ததன் நினைவாக அவை என்றும் என் ஆல்பத்தில் இருக்கும். நண்பர் எம்.எஸ். நன்றாக இருக்கிறார்.

ஜே.கே. பற்றிய நூல்களில் என்னென்ன என் வீட்டு நூல் நிலையத்தில் இருக்கின்றன என்று பார்க்கிறேன். அவை பற்றிய முழு விவரங்களையும் தருகிறேன். இவற்றைச் செய்து முடிக்கச் சிறிது அவகாசம் தேவை.

என் குடும்பத்தாருடன் ஒரு முறை திருவண்ணாமலைக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். அப்போது உங்களுடன் தொடர்பு கொள்வதோடு உங்கள் வீட்டிற்கும் அவசியம் வருவேன்.

நண்பர் பவா செல்லத்துரை அவர்களிடமும் பிற நண்பர்களிடமும் என் அன்பையும் வணக்கத்தையும் தெரிவியுங்கள்.

தினமணி தீபாவளி மலரில் ‘டால்ஸ்டாய் தாத்தாவின் கை’ என்ற என் சிறுகதை வெளிவந்திருக்கிறது. முடிந்தால் படித்துப் பாருங்கள்.

உங்களின் வாழ்க்கை சிறப்பாக அமையவேண்டும் என்று நான் பெரிதும் விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளில் நீங்களும் ஈடுபட்டு வரவேண்டும்.

என் அன்பார்ந்த வாழ்த்துக்களுடன்,

சுரா

No comments: