May 09, 2013

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரால் புறக்கணிக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கரின் செய்தி

டாக்டர் ஜமனாதாஸ்                          நன்றி www.ambedkar.org 

[[www.ambedkar.org என்ற தளத்தில் வெளியான டாக்டர்  ஜமனாதாஸின்  “A Neglected Message From Dr. Ambedkar TO OBCs” என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்]]

                                                                                                                                            தமிழாக்கம் : யுவபாரதி

பம்பாயிலிருந்து இயங்கிவருவதும், ‘மராட்டா மந்திர்’ என்று அழைக்கப்படுவதுமான மராட்டா வகுப்பினருக்கான அமைப்பின் நிறுவனத் தலைவர் பாபாசாகேப் கவாந்தே என்பவர். இவர் டாக்டர் அம்பேத்கரின் நெருங்கிய நண்பரும் கூட. 1947ல், அம்பேத்கர் நேரு அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தபோது, ‘மராட்டா மந்திர்’ அமைப்பின் நினைவு மலரில் வெளியிடுவதற்காக, அம்பேத்கரிடம் ஒரு செய்திமடல் வழங்குமாறு கேட்டார். மராட்டாக்களின் அமைப்பிற்கும் தமக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று சொல்லி செய்திமடல் வழங்க மறுத்தார் அம்பேத்கர். எனினும், கவாந்தேவின் தொடர் வற்புறுத்தலின் காரணமாக, அம்மலருக்குச் செய்திமடல் வழங்கினார் அம்பேத்கர். அச்செய்தி அம்மலரில் 23/03/1947 அன்று வெளியானது. அந்த முக்கியமான இதழ் மராட்டா மந்திர் அலுவலகத்தில் கிடைக்கப் பெறவில்லை. எனினும், ஸ்ரீ விஜய் சுர்வாதே என்பவரிடம் அவ்விதழ் பாதுகாப்பாக இருப்பது சமீபத்தில் தெரியவந்தது. ஆனாலும், இதுவரை அதுபற்றி எங்கும் பதிவு செய்யப்படவில்லை.

அம்மடலில் அம்பேத்கர் கூறுவதாவது :

“இவ்விதி மராட்டாக்களுக்கு மட்டுமல்ல, அனைத்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பொருந்தும். மற்றவர்களின் விரலசைவுக்குக் கட்டுப்பட்டு அடங்கியிருக்க விரும்பாதவர்கள் இரு விஷயங்களில் மிகவும் கவனம் செலுத்தவேண்டும். ஒன்று அரசியல். மற்றொன்று கல்வி.”

“ஒன்றை நான் சொல்லவேண்டும். ஒரு சமூகம் கட்டுப்பாடு மிக்கதாகவும், ஆட்சியாளர்கள் மீது மறைமுக அழுத்தம் தரத்தக்கதாகவும் இருந்தால் மட்டுமே அமைதியாக வாழமுடியும். எண்ணிக்கையில் பலவீனமாக இருந்தாலும் கூட, அதனால் ஆட்சியாளர்கள் மீது உரிய அழுத்தம் தந்து அதிகாரம் செலுத்த முடியுமானால் போதும். உதாரணம் : இந்தியாவில் இன்றைய பிராமண சமூகம். இது போன்ற அழுத்தங்களைச் சரிவரப் பராமரிப்பது என்பது அரசுக்கு மிக முக்கியமானது. இல்லாவிடில், வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டிருக்கும் ஓர் அரசின் இலக்கும் திட்டங்களும் சரியான திசைவழியில் செல்லாது.”

“அதே சமயம் முக்கியமான இன்னொன்றை மறக்கக்கூடாது. அது கல்வி. ஆரம்பக் கல்வியையல்ல. உயர்கல்வியைக் குறிப்பிடுகிறேன். பற்பல சமூகங்களுக்கு இடையிலான போட்டியில் அவரவர்க்குரிய வளர்ச்சியை எட்டவும் தக்கவைக்கவும் உயர்கல்வியே மிக முக்கியமானது.”

“என்னைப் பொருத்தவரை, உயர்கல்வியே கல்வி. அதனால் மட்டுமே அரசு நிர்வாகத்தில் வலுவான முக்கியப் பதவிகளை உங்களால் வென்றெடுக்கமுடியும். பிராமணர்கள் எத்தனையோ எதிர்ப்புகளையும் தடைகளையும் எதிர்கொள்ளவேண்டியிருந்தும், அவற்றைக் கடந்து முன்னேறி வருகின்றனர் (என்பதைக் காண்க).”

“சமத்துவமின்மையாலும், கல்வியில் மலைக்கும் மடுவுக்குமாகவுள்ள வேறுபாட்டினாலுமே சாதியமைப்பு இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்துவருகிறது என்பதைப் பலரும் உணர்வதில்லை. இன்னும் சில நூற்றாண்டுகளேனும் இது தொடரும் என்பதையும் பலர் 'நினைப்பதில்லை. ஆனால், நான் மறக்கவில்லை. கல்வியில் பிராமணர்களுக்கும் பிராமணரல்லாதாருக்குமான இப்பெரும் வேறுபாடு என்பது வெறும் ஆரம்ப மற்றும் பள்ளியிறுதிக் கல்வியோடு மட்டும் முடிந்துபோவதில்லை.சமூக அந்தஸ்தோடு தொடர்புடைய இவ்வேறுபாட்டை உயர்கல்வியால் மட்டுமே குறைக்கமுடியும். நீண்டகாலம் பிராமணர்களின் தனியாதிக்கத்திற்கு உட்பட்டிருக்கும் (அரசுத் துறையின்) வலுவான முக்கியப் பதவிகளை பிராமணரல்லாதாரில் சிலரேனும் கட்டாயம் அடையவேண்டும். இது அரசின் கடமை என்றே நான் நினைக்கிறேன்.அரசாங்கத்தால் இதைச் செய்யமுடியவில்லையெனில் மராட்டா மந்திர் போன்ற அமைப்புகள் இதைச் செய்யவேண்டும்.”

“முக்கியமான இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். இடைநிலை வகுப்பினர் உயர்கல்வி மற்றும அந்தஸ்தும் பெற்ற உயர்வகுப்பினரோடு தம்மை ஒப்பிட்டுக்கொள்ள முயல்கின்றனர். அதே தவறை அடித்தட்டு மக்களும் செய்கின்றனர். ஆனால், இடைநிலை வகுப்பினர் உயர்வகுப்பினர் போன்று சமூக சுதந்திரம் பெற்றவர்களல்ல, அதே சமயம் அடித்தட்டு மக்களின் கருத்துப்போக்கு கொண்டவர்களும் அல்ல. இவ்வேற்றுமை இடைநிலை வகுப்பினரை பிற இரு வகுப்பினருக்கும் பகையாக்கிவிடுகிறது. மகாராஷ்டிரத்தின் மராட்டாக்களுக்கும் இந்த பிரச்சினை இருக்கிறது. இவர்கள் முன் இரு வழிகளே உள்ளன. ஒன்று – உயர்வகுப்பினரோடு சேர்ந்துகொண்டு அடித்தட்டு மக்கள் மேலே வளரவிடாமல் தடுப்பது. மற்றொன்று – அடித்தட்டு மக்களோடு சேர்ந்துகொண்டு இருவகுப்பாரின் வளர்ச்சிக்கும் தடையாக உள்ள உயர்வகுப்பினரின் ஆதிக்கத்தை ஒழிப்பது. இடைநிலை வகுப்பினர் தம்மை அடித்தட்டு மக்களோடு அடையாளம் கண்டுகொண்ட ஒரு காலம் இருந்தது. ஆனால், இன்று அவர்கள் தம்மை உயர்வகுப்பாருடனே அடையாளம் காண்கின்றனர். அவர்கள் தொடர்ந்து செல்லவுள்ள வழி எது என்பதையே இது காட்டுகிறது. ஒட்டுமொத்த இந்திய மக்களின் எதிர்காலம் என்று அல்ல, தம் சொந்த வகுப்பு மக்களின் எதிர்காலமே கூட மராட்டா சமூகத் தலைவர்களின் தீர்மானத்தில் தங்கியிருக்கிறது. உண்மையில் இவையாவும் மராட்டா தலைவர்களின் அறிவுக்கும் திறனுக்கும் உட்பட்டது. ஆனால், அதுபோன்ற அறிவார்ந்த தலைமை மராட்டாக்களிடையே போதுமான அளவில் இல்லை என்றே கருதுகிறேன்.”

டாக்டர் அம்பேத்கர் மராட்டக்களைப் பற்றி என்ன சொன்னாரோ, அது அனைத்து (இதர) பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் அப்படியே பொருந்துகிறது. (இதர) பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அறிவூட்ட டாக்டர் அம்பேத்கர் நிறையவே எழுதியுள்ளார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மேன்மேலும் எழுச்சி பெற்றுவரும் இன்று மட்டுமல்ல, இந்நாட்டின் எதிர்காலமே கூட அவர்களையே சார்ந்துள்ளது என்பதை நிச்சயம் மறக்கக்கூடாது. 

(லோக்ஸத்தா  நாளிதழ் சார்ந்த ஓர் உள்ளூர் மராட்டி இதழில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் இது. மராட்டியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. -  டாக்டர் ஜமனாதாஸ்)

No comments: