August 26, 2013

வீட்டுநாய்


நான்கு காலும் மூச்சிரைக்கும் நாக்குமாய்த்தான்
வீட்டு நாயும் இருக்கிறது

எங்கோ கூவும் சேவல் காணாது
அரைத்துயில் கெட்டுக் குரைக்கிறது

வெளிப்படும் எஜமானியின் கால் சுற்றி வால் குழைத்து
தலை தடவலில் கண்லயிக்கிறது

வீடும் வேலியும் தாழிடல் கண்டு
சங்கிலிக் கழுத்து இழுபட வேலி பிறாண்டுகிறது

தரை படுத்து வீதி வெறித்து
உணவு பரிமாறும் ஒற்றைத் தட்டோடு பகல் நகர்த்துகிறது

வாசலில் நிழல் நகரும்
எவ்வொரு கணமும் விசுவாசம் பொங்க வீறிடுகிறது

ஒற்றைத் தெருவில் இரவு மேய்த்து
இழுத்துக் கட்டும் நேரம்
கருவானம் நோக்கி ஊளையிடும் பாவனையில்
அசட்டுக் குரைப்போடு அடங்குகிறது

நான்கு காலும் மூச்சிரைக்கும் நாக்குமாய்த்தான்
வீட்டு நாயும் இருக்கிறது.


-யுவபாரதி

No comments: