August 02, 2016

குட்டைமீன்களை எனக்குப் பிடிப்பதில்லை

முன்பு எனக்கு நதியைத் தெரியாது
இந்தக் கண் மூலையிலிருந்து
அந்தக் கண் மூலைவரைக்கும்
வலைகளை அள்ளி ஓடிய
சிறுமியாகத்தான் முதலில் பார்த்தது

தூண்டில்கள் தவம் கிடக்க
இரு கண்களுக்கிடையே
மூன்றாம் காலால் வழிதட்டிய
மூதாட்டியாக நடந்து போனதை
அடுத்தமுறை பார்த்தேன்

ஏழெட்டு குட்டைகளாய்ப்
பார்வைக்கு எஞ்சுகிறது இம்முறை
ஒன்றேபோல் உருட்டிமுழிக்கும்
சொற்களென நெருக்கிக் கிடப்பவை
வெவ்வேறு கூடைகளில் நிரம்புகின்றன

குட்டைமீன்களை 
எனக்குப் பிடிப்பதில்லைதான்
தெரிந்தவர்கள் விற்றால்
வாங்கிப் போக வேண்டியிருக்கிறது. 

No comments: