January 11, 2010

ஜன்னல்

நெஞ்சக் கூடு உலர முயன்றாலும்
சட்டம் விட்டகலப் போவதில்லை
நான்
அடிக்கடி திறக்கும் வாசல்
உயிர்ப் பிணங்களை உள்ளனுப்புவதாய்
உன் பிதற்றல்
கம்பிகளினூடாக வெளியில்
பறக்க யத்தனிக்கலாம் நீ
ஆனால் பகல்
வாய் பிளக்கவில்லை இன்னும்

இருட்டின் வெளிச்சத்தில் பார்
உன் கரங்களை
உன்னைப் பெருநோயாளி
ஆக்கியிருக்கின்றன பகல்கள்
அழுக்கு உதிர்க்க
நீ வெட்டுவது நகங்களை அல்ல
அழ்கிய உன் விரல்களை
நகப் பூச்சு அணிந்து
தினமும் அதை அழகுபடுத்துகிறாய்

உன் மன்றாட்டுக்கு
சாயப் போவதில்லை என் செவி
நான் விலகினால்
நீ சென்றடைய மரம் வயல்
இல்லை
உன் எச்சம் முளைக்காது
நான் விலகினால்
உன் முகத்தில் அப்பிக் கொள்ளும்
விடியல்
குருடாகலாம் அல்லது
இறப்பின் மடியில் நீ
மூச்சுத் திணறலாம்

ஆகவே நண்பனே
படுக்கைக்குத் திரும்பு
வழக்கம் போல கனவுசெய்
உறங்க அல்லது விழிக்காமலிருக்க.

No comments: