November 27, 2014

மனமாய் இருப்பவள் மனஸா

பாதுகாக்கப்பட்ட கார்பங்கா வனப்பகுதியை ஒட்டி இருக்கிறது பசிஷ்டா மந்திர். யானைகள் மிகுந்த அவ்வனத்தில் வண்ணத்துப்பூச்சிகளின் சரணாலயம் ஒன்றும் இருப்பதாகச் சொன்னார்கள். நான் தங்கியிருந்த பாஞ்சாபாரியிலிருந்து குவாஹாத்தி நகரத்திற்கு வந்து, பேருந்து பிடித்து பசிஷ்டா மந்திரை அடைகையில் காலை பத்து மணி. நகரத்திற்கு தென்கிழக்கு மூலையில் எட்டு மைல் தொலைவில் இருக்கிறது பசிஷ்டா மந்திர்.
பசிஷ்டா மந்திர்
வங்காள மொழியைப் போலவே அசாமிய மொழியிலும் வகரம் கிடையாது. வகரம் ‘ப’கரமாகவே (ba) உச்சரிக்கவும் எழுதவும் படுகிறது. மொழிமுதல் அகரம் பெரும்பாலும் ஒகரமாக உச்சரிக்கப்படுகிறது. வங்காளம் என நாம் சொல்லும் தங்களின் மொழியை வங்காளிகள் பாங்ளா பாஷா என்பர். விவேகானந்தரும் ரவீந்திரநாதரும் அவர்களுக்கு பிபேகானந்தவும், ரொபீந்த்ரநாத்தும்தான். அசாமிய மொழியிலும் பசிஷ்டா மந்திர் என்றால் வசிஷ்டர் மந்திர். ஆனால் உண்மையில் அங்கிருப்பது வசிஷ்டரால் பூஜிக்கப்பட்டாகக் கூறப்படும் சிவன் கோயில். தற்போதிருக்கும் கோயில் பதினெட்டாம் நூற்றாண்டில் அஹொம் வம்ச மன்னனான ராஜேந்திர சின்ஹா என்பவனால் கட்டப்பட்டது. அஹொம் வம்சத்தினர் ஆண்டதால்தான் அஸொம் (அசாம்).

இராமனுக்குக் குலகுருவென்றும், விசுவாமித்திரருக்குப் பரமவைரி என்றும், வைதீக முறைப்படி செய்யப்படும் திருமணத்தில் ஒரு சடங்காக உள்ள அருந்ததி நட்சத்திரம் பார்த்தல் என்பதில் குறிப்பிடப்படுகிற அருந்ததி தேவியின் கணவர் என்றும் அறியப்படும் வசிஷ்டர் தமது இறுதிக்காலத்தில் இவ்விடம் வந்து ஆசிரமம் அமைத்துத் தங்கியதாகவும், இங்குள்ள ஒரு குகையில் இன்றும் தவத்தில் இருப்பதாகவும் நம்புகிறார்கள்.

அசாமியர்களுக்கு ஆரஞ்சு எனப்படும் செம்மஞ்சள் நிறம் மிகவும் பிடிக்கும் போல. ஆடை, கைவளை, வீட்டுப்பூச்சு என அவ்வண்ணம் கண்ணை நிறைக்கிறது. பூ என்றால் அதே நிற சாமந்திதான். பேருந்திலிருந்து இறங்கி, மேடான மண் பாதையில் நடக்கையில் வழியின் இருமருங்கிலும் நம்மூர் போலவே பெண்களால் நடத்தப்படும் பூக்கடைகளும் வளையல் கடைகளும்.

பசிஷ்டா மந்திர் படியேறும் முன் இருக்கிறது கணேஷ் மந்திர். அதன் கூம்பு வடிவ வெண்ணிறக் கோபுரம் சாம்பலேறியிருந்தது. சுவர்களில் வியாசர் சொல்லி விநாயகர் மகாபாரதம் எழுதுவதான பலவண்ணப் புடைப்புச் சிற்ப வேலைப்பாடுகள். மஞ்சள் கொன்றை மரம் ஒன்று கோபுரத்தைத் தழுவிய கிளைகளிலிருந்து பூச்சொரிந்தது.

பசிஷ்டா மந்திருக்குள் நுழைந்ததும் கையில் கமண்டலம் தரித்த இரண்டு ஆள் உயர வசிஷ்டர் சிலை. அவருக்கு எதிரே நந்தி அளவுக்குப் பெரிய மூஞ்சூறு சிலை. உள்ளேயிருந்த விநாயகரைப் பார்த்திருக்கிறது போல. கோயில் மண்டபத்தில் திருமணச் சடங்கு ஒன்று நடந்து கொண்டிருந்தது. அங்கு குழுமியிருந்த பெண்கள் பாடிய பாடலின் ராகமும் தாளமும் இப்போதும் மனதில் ஓடுகிறது. எழுதத்தான் தெரியவில்லை. வெள்ளை ஆடைகள் உடுத்தி தலையில் பரிவட்டம் போல பூமாலை சுற்றிய மணமகன் வெள்ளை வேட்டியும் மஞ்சள் பனியனும் அணிந்த புரோகிதர் சொன்னதை முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.

மண்டபம் கடந்ததும் ஏதோ இருட்குகையில் நுழைவது போலிருந்தது. மணியோசை விடாமல் கேட்டது. கருவறைக்கான படிகள் கீழிறங்கிச் செல்கின்றன. வரிசையில் நின்று கொண்டுவந்திருந்த சிறு சொம்புகளிலிருந்த நீரால் மூலவரான சிவலிங்கத்திற்கு முழுக்காற்றி பூத்தூவி வேண்டுதல் சொல்லி நகர்ந்தனர் பக்தர்கள். எதிரே அமர்ந்து மந்திரம் சொல்லிக்கொண்டிருந்தார் அர்ச்சகர். நம்மூர் சிவன் போல அர்ச்சகரை மட்டுமே கருவறைக்குள் அனுமதித்து, பக்தனின் வேண்டுதல்களை அவரிடம் மட்டுமே கேட்பவனாக இல்லை அசாம் சிவன்.

பசிஷ்டா மந்திர் பகுதியைச் சுற்றிலும் மேகாலயா மலைத்தொடரைச் சேர்ந்த பச்சை மலைகள். அங்கு எங்கோ உற்பத்தியாகும் பசிஷ்டா-பாஹினி (வசிஷ்டா-வாஹினி) எனும் சிற்றாறுகள் மந்திரை ஒட்டித் தவழ்கின்றன. பிரம்மபத்திராவில் சென்று கலப்பவையாம். நான் சென்றது கோடைக்காலமானதால் ஓடைகளாகவே தென்பட்டன. அவற்றிற்கு நடுவில் ஆங்காங்கே தென்பட்ட பாறைகளில் ஒன்றில் மனஸா தேவியின் சிலை.சுதைச் சிற்பம். இடது கால் மேல் வலது காலைத் தூக்கிவைத்து, கம்பீரமும் கனிவுமான விழிகளைக் கொண்ட மஞ்சள் நிறத்துத் தேவிக்கு செம்பட்டு சாற்றி சாமந்தி மாலை போட்டிருந்தார்கள். இரு பக்கமும் அவள் தலை உயரத்திற்கு கருப்பும் மஞ்சளுமான நாகங்கள், காலுக்கருகில் வெள்ளன்னம், மற்றொரு நாகம். வலது கீழ்க்கை அபயமுத்திரை காட்ட, மற்ற மூன்று கைகளிலும் தொங்கும் நாகங்கள். புன்னகை பூத்த இதழ்கள்.

மனஸா தேவி
மனஸா என்றால் மனமாயிருப்பவள் என்று பொருள். மனம் விழையும் போகத்திற்கும் யோகத்திற்கும் குறியீடு நாகம். மனஸா தேவி நாகதெய்வம். மகாபாரதத்திலும் தேவி பாகவதத்திலும் இவள் பற்றி பேசப்படுகிறது. பாற்கடலைக் கடையக் கயிறாக இருந்ததாகக் கூறப்படும் நாகராஜன் வாசுகியின் தங்கையே மனஸா தேவி. அபிமன்யுவின் மகனான பரீட்சித்து கார்க்கோடகன் எனும் நாகம் கடித்து இறந்துவிடுகிறான். இதற்குப் பழிதீர்க்கத் தீர்மானித்த அவன் மகன் ஜனமேஜயன் அனைத்து பாம்புகளையும் கொல்லும்பொருட்டு சர்ப்பயாகம் செய்யத் தொடங்குகிறான். தங்கள் இனம் அழிவது கண்ட பாம்புகள் வாசுகியிடம் முறையிடுகின்றன. அண்ணனின் வேண்டுகோளை ஏற்று, ஜரத்காரு முனிவரை மணந்து ஆஸ்திகன் எனும் மகனைப் பெறுகிறாள் மனஸா தேவி. இளம்பிள்ளையான ஆஸ்திகன் தாயிடமே கல்வி கற்ற ஜனமேஜயனிடம் சென்று வாதிட்டு சர்ப்பயாகத்தை நிறுத்தி பாம்பினத்தை அழிவிலிருந்து காக்கிறான். இதனால் பாம்புகள் என்றும் மனஸா தேவியின் ஆணைக்குக் கட்டுப்பட்டவையாய் இருக்கின்றன. நாகேசுவரியான இவளை வணங்கினால் பாம்புகளால் தீங்கு நேராது என்கிறது தேவி பாகவதம்.

ஓடைகளுக்கு மறுபுறத்தில் மனஸா தேவிக்குத் தனிக்கோயில் இருக்கிறது. படியேறும் முகப்பில் நீலமும் பச்சையுமான இருபெரும் நாக உருக்கள்  குடைகளாய் நிற்கின்றன. நிறைய படிகள் கொண்ட அப்பாதை வளைந்து வளைந்து மேலேறுகிறது. கைப்பிடிச் சுவர், படியோரம் என படுத்திருப்பதும் படமெடுப்பதுமான பாம்பு உருக்கள். கணவனே கண்கண்ட தெய்வம் படத்தில் லலிதா குடியிருக்கும் நாகலோகத்தில் கூட இத்தனை பாம்புகளைப் பார்த்ததில்லை. தத்ரூபமான பாம்பு உருக்களுக்கு நடுவில் நிஜப் பாம்புகள் சிலவும் கூட படுத்தோ படமெடுத்தோ இருந்திருக்கலாம். மனஸா தேவி கோயிலின் கருவறையிலும்  ஓடைகளுக்கிடையில் கண்டதே போன்ற சுதைச் சிற்பம். கருவறை எங்கும் சாமந்தி, செம்பருத்தி. கருவறை மனஸா தேவியை விட, ஓடைநடு மனஸா தேவியே கொள்ளை அழகு.

வெயில் ஏற ஏற பசிக்கத் தொடங்கியது. அசாம் வந்து சேர்ந்த முதல் இரண்டு நாட்கள் அங்கு பரவலாகக் கிடைத்த ரொட்டியையும் ஒரு விதமான சப்ஜியையையும் மட்டும் சாப்பிட்டு ஜீவிக்கத் தயங்கிய வயிற்றின் பொருட்டு, அரிசிச் சோற்றுக்கு வேண்டி நகரத்திற்குள் சென்று அலைய வேண்டியிருந்தது. மியூசியம் அருகிலிருந்த ஒரு எளிய தென்னியந்திய உணவகத்தைக் கண்டுபிடித்தேன். குவாஹாத்தி இரயில் நிலையத்தை ஒட்டி பல உயர்ரக தென்னிந்திய உணவகங்கள் இருக்கின்றன. அங்கு வேளாவேளை சாப்பிட்டால் ஊர் திரும்பக் காசிருக்காது. சில நாட்களில் அசாமிய உணவே பழகிவிட்டது.

சாப்பிட்டுவிட்டு மலையேறவும் அயர்ச்சியாயிருந்தது. ஒரு பாறையில் புடைப்புச் சிற்பமாய் என் போல் வெயிலில் காய்ந்து கொண்டிருந்த பத்துகைக் காளி வழியில் தென்பட்டாள். அருகிலிருந்த ஒரு சிமெண்ட் கூரை வேய்ந்த மண்டபத்தில் நிழலுக்கு ஒதுங்கினேன். கருத்த நெடிய சற்றே கனமான ஒருவரும், சிவந்த நெடிய சற்றே ஒடுங்கிய ஒருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். இருவருமே எழுபது வயதைக் கடந்தவர்களாய்த் தெரிந்தது. என்னைக் கண்டதும் அருகழைத்து தண்ணீர் நீட்டினார் ஒருவர்.

முதலில் குறிப்பிடப்பட்டவர் பெயர் லல்லன் திவாரி. உத்தரப்பிரதேசத்துக்காரர். மத்திய அரசுப்பணி நிமித்தம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்தவருக்கு இவ்விடமே பிடித்துப்போய்விட்டது. குடும்பத்தையும் அழைத்துக் கொண்டுவிட்டார். இப்போது பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டார்கள். அதே மலையிலேயே சற்றுத் தொலைவிலிருக்கும் தன் வீட்டைக் காட்டினார். அசாம் பாணியிலேயே இருந்தது. சொன்னேன். சிரித்துக் கொண்டார். இரண்டாவதாய்க் குறிப்பிடப்பட்டவர் ஜீத் சிங். சிக்கிம்காரர். பத்து வயதில் தன் தந்தையோடு அசாம் வந்து காவல்பணியில் ஈடுபட்டவர். இப்போது அவர் மகன் எல்லைப் பாதுகாப்புப்படையில் இருக்கிறான். தாங்கள் இருவரும் சந்தித்துப் பேசிக்கொள்வது ஒரு நாளும் தவறாது என்று திவாரியின் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னார் ஜீத் சிங்.

மேலே இருக்கும் பஞ்சகன்யா மந்திரைப் பற்றிச் சொன்ன திவாரி, தானும் உடன் வரட்டுமா என்று கைத்தடியை எடுத்துக் கொண்டு எழமுனைந்தார். வேண்டாமென்று தவிர்த்தேன். அதைக் கடந்து மேலே அதிக தூரம் தனியாகச் செல்லவேண்டாம் என்றார். தலையாட்டினேன். சிரித்தபடியே வெற்றிலையும் தம்பாக்கும் தந்தார். இருவரையும் வணங்கிவிட்டு மலையேறினேன்.

- யுவபாரதி 

No comments: