October 27, 2011

நாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-7)

தஞ்சை நாயக்கர்கள்

ஹொய்சளர்களிடமிருந்து குமார கம்பணனால் கைப்பற்றப்பட்ட நாள் முதல் (கி.பி.1363) தஞ்சை விஜயநகரப் பேரரசின் கீழ் வந்தது. 160 ஆண்டுகள் பேரரசால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளான தண்டநாயகர்கள் எனப்படும் மண்டலேசுவரர்களால் ஆளப்பட்டது. தஞ்சையின் கடைசி மண்டலேசுவரர் வீர நரசிங்கராயர் ஆவார். இது பேரரசின் நேரடி ஆட்சியாகும். கி.பி.1532-ஆம் ஆண்டே பேரரசுக்குத் திறை செல்லுத்துவதான தனி நாயக்கர் ஆட்சி தஞ்சையில் நிறுவப்பட்டது. 

தஞ்சையை ஆண்ட நாயக்கர்கள் முறையே சேவப்ப நாயக்கர் (1532-1563), அச்சுதப்ப நாயக்கர் (1560-1614), இரகுநாத நாயக்கர் (1589-1634), விஜயராகவ நாயக்கர் (1633-1673) ஆகியோர். இவர்கள் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட பலிஜ குலத்தின் நாயுடு பிரிவினர். குடும்பப் பெயர் அல்லூரி என்பது. தகப்பனார் ஆட்சியில் இருக்கும் பொழுதே மகனுக்கு இளவரசுப் பட்டம் (யுவராஜா) சூட்டி இணையாட்சி   (Co-rulership) நடத்துவதும் இவர்களது வழக்கமாய் இருந்தது.

மண்டலேசுவரர்கள் ஆட்சியிலும், நாயக்கர் ஆட்சியிலும் (மொத்தம் 300 ஆண்டுகள்) தெலுங்கே ஆட்சிமொழியாக இருந்தது. தெலுங்கும் சமஸ்கிருதமும் பெரிதும் பேணப்பட்டன. இன்றும் தெலுங்கு இலக்கிய வரலாற்றில் போற்றப்படக் கூடிய பல தெலுங்கு இலக்கிய நூல்கள் தஞ்சை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்டிருக்கின்றன (அடுத்தடுத்த பதிவுகளில் நூல் பட்டியல்). தமிழ் ஆட்சி அதிகாரத்திலும் இல்லை. தமிழ்ப் புலவர்கள் பேணப்படவும் இல்லை. அரச ஆதரவிற்காக தமிழிசை தெலுங்கு பாட ஆரம்பித்தது. கருநாடக இசையானது. (நாயக்கர், அடுத்து மராட்டியர், பின் ஆங்கிலேயர்...) அப்படியே நீடித்தும் விட்டது. 

தஞ்சை நாயக்கர்கள் காலத்தில் அரசு அதிகாரிகள், படைத் வீரர்களுக்கான ஊதியம் நிலமானியமாகவே வழங்கப்பட்டது. அரசர்கள் தங்களுக்கு நம்பிக்கையானவர்கள் என்ற வகையில் தங்களது தெலுங்கினத்தவர்களையே உயர் பொறுப்புகளுக்கு நியமித்ததால், மானியம் என்ற பெயரில் நிலங்கள் தெலுங்கினத்தவர் வசம் பெரிதும் சென்றன. அரசுப் பணிபுரிய விரும்பும் தமிழர்கள் தெலுங்கு கற்க வேண்டிய அவசியமும் நேர்ந்தது.

தஞ்சை நாயக்கர்கள் இராஜமன்னார் சுவாமி எனும் மன்னார்குடிப் பெருமாளைத் தம் குலதெய்வமாக வணங்கினர். 

அல்லூரி சேவப்ப நாயக்கர்

தஞ்சையின் முதல் நாயக்கராக அமர்த்தப்பட்டவர் சின்னசேவா என்றும் சேவபூபா என்றும் அழைக்கப்பட்ட சேவப்ப நாயக்கர் ஆவார். 

விருத்தாசலம்
விருத்தகிரீசுவரர் கோவில்
 
விஜயநகரப் பேரரசின் ஆர்க்காடு பகுதிக்கான பிரதிநிதியாக இருந்தவரும், (இன்றைய சேத்துப்பட்டு நகரை அடுத்த) நெடுங்குணத்திலிருந்து ஆண்டவருமான் திம்மப்ப நாயுடுவின் மகன் சேவப்பன். துவக்கத்தில் விஜயநகரப் பேரரசர் அச்சுதராயரது நம்பிக்கைக்குரிய அடைப்பக்காரனாக (தாம்பூலம் மடித்துத் தருபவர்) இருந்தவர். அடைப்பக்காரன் என்பவர் பேரரசரது அருகிலேயே எப்போதும் இருப்பவராதலாலும், அரசு மற்றும் அரசர் சார்பான அனைத்து இரகசியங்களையும் அறிந்து கொள்கிற வாய்ப்புள்ளவர் என்பதாலும், அரசருக்கு நெருங்கிய உறவினராக அல்லது உயர்குடி பிறந்தவராகவும் (Royal Family), மிகவும் நம்பிக்கையானவராகவும் இருப்பவரையே இராயர்கள் தமது அடைப்பக்காரராக நியமித்துக் கொள்வர் என்பது கருதத்தக்கது.
தன் மனைவி திருமலாம்பாவின் தங்கை மூர்த்திமாம்பாவைச் சேவப்பனுக்குத் திருமணம் செய்து வைத்தார் அச்சுதராயர். மூர்த்திமாம்பாவின் பொருட்டுச் செவ்வப்ப நாயக்கருக்கு ஸ்த்ரீதனமாக (சீதனம்) இராயரால் வழங்கப்பட்டதே தஞ்சை நாயக்கத் தானம். தஞ்சாவூரி ஆந்த்ர ராஜுலு சரித்ரமு, தஞ்சாவூரி வாரி சரித்ரமு முதலான தெலுங்கு நூல்கள் இதை உறுதி செய்கின்றன.

திருவண்ணாமலை 
கோவில் இராஜகோபுரம்  
தஞ்சை பகுதி முழுமையும் ஆர்க்காட்டின் ஒரு பகுதியையும் ஆட்சி செலுத்தியவர் சேவப்ப நாயக்கர். செஞ்சி, மதுரை நாயக்கர்கள் போலன்றி தஞ்சை நாயக்கர்கள் அனைவருமே பேரரசிற்கு விசுவாசமான திறை அரசர்களாக இருந்தவர்கள் ஆவர்.சேவப்ப நாயக்கரும் அப்படியே. பேரரசர் அச்சுதராயர் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தன் மகனுக்கு அச்சுதப்பன் என்றே பெயரிட்டவர் சேவப்ப நாயக்கர். கி.பி.1532-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற செவ்வப்பர், 1560-இல் அச்சுதப்பனுக்கு இளவரசுப் பட்டம் (யுவராஜா) கட்டினார். 1563 வரை அரசாண்டார். பின் ஓய்வெடுத்து 1580 வரை வாழ்ந்தார். சேவப்ப நாயக்கர் ஆட்சிக்காலம் பெரும் போர்கள் ஏதுமின்றி அமைதியாகக் கழிந்தது எனலாம்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் இராஜகோபுரம் மற்றும் சிவகங்கைக் குளம், விருத்தாசலம் விருத்தகிரீசுவரர் கோவில் மதிற்சுவர் மற்றும் கொடிக்கம்பம், ஸ்ரீசைலம் மற்றும் திருப்பதி கோவில் விமானங்களுக்குப் பொன்கூரை ஆகியவை சேவப்ப நாயக்கரின் திருப்பணிகள் எனப்படுகின்றன.  

- யுவபாரதி

(அடுத்தது)

October 24, 2011

தாய்மொழியைக் கண்டறிதல் பற்றி ஒரு கதை


(இளம் வயதில் படித்தது. நினைவிலிருந்து...)

கிருஷ்ணதேவராயர் அரசவைக்கு ஒரு பன்மொழிப் புலவர் வந்தார்.

"உங்கள் அரசவையில் யாரேனும் என் தாய்மொழியைக் கண்டுபிடித்துச் சொல்ல  முடியுமா?" என்று சவால் விட்டார்.

இராயர் அரசவையிலிருந்த அஷ்டதிக் கஜங்கள் எனப்பட்ட எட்டு பெரும் புலவர்களும் பல்வேறு மொழிகளில் அவரிடம் கேள்விகள் கேட்டனர். அவரும் அவரவர் கேட்ட மொழிகளில் தெளிவாகப் பதிலளித்தார். சப்ததிக் கஜங்கள் தோல்வி கண்டு தலைகுனிந்தனர். இராயர் அரசவையை ஏளனமாகப் பார்த்தார் அப் பன்மொழிப் புலவர்.

"அப்புலவனின் தாய்மொழியை நான் கண்டறிந்து நாளை அரசவையில் தெரிவிக்கிறேன்" என்றான் தெனாலிராமன். அரைகுறை நம்பிக்கையோடு ஒப்புக் கொண்ட இராயர் அப்புலவரிடம் ஒரு நாள் அவகாசம் சொன்னார்.

அன்றிரவு, அப்புலவர் தங்கியிருந்த மாளிகைக்குள் யாரும் அறியாமல் நுழைந்தான் தெனாலிராமன். அப்புலவரது படுக்கை அறையின் ஜன்னலை ஒட்டியிருந்த கையில் தண்ணீர் நிறைந்த ஒரு செம்புடன் ஒரு புதரில் ஒளிந்து கொண்டான்.

உண்டு களித்து சற்று நேரத்தில் அயர்ந்து உறங்கிப் போனார் அப்புலவர். இதுதான் தக்க தருணம் என உணர்ந்த தெனாலி ராமன், கையில் இருந்த செம்பு நீரை ஜன்னல் வழியாக அப்புலவன் மீது ஊற்றினான். திடுக்கென்று விழித்த புலவர், "ஆருடெ அது? பட்டி மோனே!" என்றவாறு எழுந்தார்.

வெளியே தலைகாட்டாது வந்த வழியே வெளியேறினான் தெனாலிராமன். 

மறுநாள் காலை அரசவை கூடியது.

தெனாலிராமனைப் பார்த்து, "இராமா! பன்மொழிப் புலவரிடம் நீ கேட்க விரும்பும் கேள்விகளைக் கேட்கலாம்" என்றார் இராயர். "அவசியமில்லை அரசே! அப்புலவரது தாய்மொழி மலையாளம்" என்றபடி, முதல்நாள் இரவு நடந்ததைக் கூறினான் தெனாலிராமன். புலவரைப் பார்த்தார் இராயர். "உண்மை" என ஒப்புக் கொண்டார் அப்புலவர்.

"அரசே! ஒருவன் விழிப்பு நிலையில் நூறு மொழிகளில் தங்கு தடையின்றி உரையாடினாலும், அவனது கனவு நிலையில் தாய்மொழியே உடனிருக்கும். ஆழ் உறக்க நிலையிலிருந்து விழிக்கும்பொழுதும் அதுவே உடன் வெளிப்படும்" என்றான் தெனாலிராமன். 

- யுவபாரதி

(பின்குறிப்பு : இது முன்னொரு காலத்தில் ஒரு தெலுங்கு அரசவையில் ஒரு மலையாளப் புலவர் குறித்து எழுந்த வாதம். நடப்புக் காலத்தில் - ஆரம்பக் கல்வி முதற்கொண்டே ஆங்கிலத்தில் படிக்கும் - உறங்கும் தமிழனிடத்தில் இதனைப் பரிசோதிக்க முடியுமா எனத் தெரியவில்லை. "Shit! who is that...?"   என்று இவன் எழுந்துவிட்டால்...!)

October 22, 2011

நாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-6)

தமிழகத்தை ஆண்ட நாயக்க மரபினரில் மிகக் குறைந்த காலமே ஆட்சியில் இருந்தவர்கள் செஞ்சி நாயக்கர்களே. கி.பி.1509 முதல் கி.பி.1649 வரை 140 ஆண்டுகள் மட்டுமே இவர்கள் ஆண்டனர். 

செஞ்சி நாயக்கர்கள்

செஞ்சிக் கோட்டை (இராஜகிரி) 
சோழர்களின் காலத்திலேயே தொண்டை மண்டலத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாக விளங்கியது செஞ்சி. சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின், பாண்டியர்கள், காகதீயர்கள் (தெலுங்கர்), ஹொய்சளர்கள் (கன்னடர்) முதலானவர்களின் ஆட்சிகளின் கீழ் இருந்தது செஞ்சி. செஞ்சியிலுள்ள கோட்டையை முதன்முதலில் அமைத்தவர் ஆனந்தக் கோன் எனும் சிற்றரசர் என்று "கர்நாடக ராஜாக்கள் சவிஸ்தார சரித்திரம்" கூறுகிறது.

விஜயநகரப் பேரரசு நிறுவனர் புக்கரது மகன் குமார கம்பணன், படைவீட்டு அரசர் இராஜ நாராயணச் சம்புவராயரைத் தோற்கடித்து தொண்டை மண்டலத்தை வெற்றிகொண்ட நாள் முதல் செஞ்சி விஜயநகரப் பேரரசின் கீழ் வந்தது. குமார கம்பணனின் காலத்தில் தொண்டை மண்டலப் பகுதியின் தலைநகராக விளங்கியது செஞ்சி. கி.பி.1363 முதல் 1509 வரை விஜயநகரப் பேரரசின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட மண்டலேசுவரர்களாலேயே ஆளப்பட்டது.

துவக்கத்தில் வடக்கே நெல்லூர் முதல் கொள்ளிடம் நதி வரையிலான பகுதிகள் செஞ்சி நாயக்கர்களின் கீழ் இருந்தன. பின்னர், விஜயநகரப் பேரரசின் ஆரவீடு மரபினர் வேலூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆளத் துவங்கியதும் வடக்கே பாலாறு முதல் தெற்கே கொள்ளிடம் வரையிலானதாக செஞ்சி நாயக்கர்களின் ஆட்சி எல்லை சுருங்கியது.

பெத்த கிருஷ்ணப்ப நாயக்கர்

செஞ்சிக் கோட்டை தானியக் கிடங்கு & கல்யாண மகால் 
விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்திலேயே செஞ்சியில் தனி நாயக்கர் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. கி.பி.1509-இல் முதல் செஞ்சி நாயக்கராக அமர்த்தப் பட்டவர் துப்பகுல கிருஷ்ணப்ப நாயக்கர் எனும் பெத்த கிருஷ்ணப்ப நாயக்கர் ஆவார். செஞ்சி நாயக்க மரபினர்  தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டபலிஜ குலத்தின் செட்டி பிரிவைச் சேர்ந்தவர்கள். செஞ்சி நாயக்கர்களின் ஆட்சிமொழி யும் தெலுங்காகவே இருந்தது.

கிருஷ்ணதேவராயரது நன்மதிப்பைப் பெற்ற அவரது படைத் தளபதியான கோனேரி வையப்ப நாயக்கரின் மகனே பெத்த கிருஷ்ணப்ப நாயக்கர். செஞ்சி நாயக்கர்களில் குறிப்பிடத் தக்கவர் இவரே. இவர் பெயரால் செஞ்சி கிருஷ்ணாபுரம் எனப் பெயர் மாற்றம் பெற்றது. இன்றுள்ள வடிவில் செஞ்சிக் கோட்டையை வடிவமைத்தவர் பெத்த கிருஷ்ணப்பனே. செஞ்சிக் கோட்டையிலுள்ள தானியக் கிடங்குகள், கல்யாண மஹால், செஞ்சியிலுள்ள மூன்று குன்றுகளையும் உள்ளடக்கி எழுப்பப் பட்டுள்ள பெருஞ்சுவர்கள் ஆகியவை இவரால் கட்டுவிக்கப்பட்டவையே. 

ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோவில் 
செஞ்சியை அடுத்துள்ள சிங்கவரத்தில் வேங்கடரமணர் மற்றும் வேணுகோபால சுவாமி கோவில்கள், திருக்கோவிலூரை அடுத்துள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் பூவராகப் பெருமாள் கோவில், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் மலர்த் தோட்டம் ஆகியவை பெத்த கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டுவிக்கப்பட்டன. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் 217 அடி உயரமுள்ள இராஜகோபுரம் கட்டுவிக்கும் பணி கிருஷ்ணதேவராயரின் உத்தரவுப்படி பெத்த கிருஷ்ணப்பரின் மேற்பார்வையில் துவக்கப்பட்டது என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனினும் அக்கோபுரத்தைக் கட்டுவித்தவர் தஞ்சை செவ்வப்ப நாயக்கரே என்று பல்வேறு வரலாற்று ஆவணங்களும் உறுதி செய்கின்றன. இச்செய்தி பாடலாக இன்றும் அக்கோவிலில் காணப்படுவதாகக் குறிப்பிடுவார் பேரா. மங்கள முருகேசன்.

துப்பகுல சூரப்ப நாயக்கர்

பெத்த கிருஷ்ணப்பருக்குப் பின், அவரது ஒரு மனைவி வெங்கலாம்பாவின் மகன் துப்பகுல சூரப்ப நாயக்கர் அரசுரிமை ஏற்றார். இவரது அரண்மனைப் புலவர் இரத்தினகேது ஸ்ரீனிவாச தீட்சிதர் என்பவர்  ஸாஹித்ய ஸஞ்சீவினி, ரஸார்ணவா,  அலங்கார கௌஸ்துபா, காவ்ய தர்ப்பணா, காவ்ய ஸார ஸங்க்ரஹா, ஸாஹித்ய ஸூக்ஷ்ம சரணி முதலான சம்ஸ்கிருத உரைநடை நூல்களும், பவன புருஷோத்தமம் என்ற சமஸ்கிருத நாடகமும் இயற்றினார்.

முதல் மற்றும் இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர்கள் 

சூரப்ப நாயக்கருக்குப் பின் பெத்த கிருஷ்ணப்பனின் மற்றொரு மனைவி லட்சுமாம்பாவின் மகன் முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் எனும் துப்பகுல வேங்கட கிருஷ்ணப்பர் கி.பி.1557-இல் அரசரானார். கி.பி.1565 தக்காண சுல்தான்களுக்கும் விஜயநகரப் பேரரசுக்கும் இடையில் நடந்த தலைக்கோட்டைப் போரில் பேரரசருக்குத் துணையாக நின்று போரிட்டவர் வேங்கட கிருஷ்ணப்ப நாயக்கரே. 

வேங்கட கிருஷ்ணப்பனுக்குப் பின் அரசேற்றவர் அவரது மகன் இரண்டாம் கிருஷ்ணப்பன் எனும் துப்பகுலத் திரயம்பக கிருஷ்ணப்ப நாயக்கராவார். தலைக்கோட்டைப் போருக்குப் பின் பலவீனமுற்றிருந்த விஜயநகரப் பேரரசை எதிர்த்துப் பெரும் கிளர்ச்சி செய்த இரண்டாம் கிருஷ்ணப்பன் பேரரசர் இரண்டாம் வேங்கடவனது படையால் கைது செய்யப்பட்டதாகவும், தஞ்சை இரகுத நாயக்கரின் தலையீட்டின் பேரில் விடுவிக்கப்பட்டதாகவும் கூறுவார் ஹீராஸ் பாதிரியார். 

இரண்டாம் கிருஷ்ணப்பன் காலத்தில் செஞ்சிக்கு வருகை புரிந்த பிமெண்டா பாதிரியார், செஞ்சியைக் கிழக்கு டிராய் என்றும், இந்திய நகரங்களில் மிகப் பெரியதான செஞ்சி, லிசுபன் தவிர பிற போர்ச்சுகல் நகரங்கள் அனைத்தையும் விடப் பெரியது என்றும் வருணித்தார்.

இரண்டாம் கிருஷ்ணப்பருக்குப் பின் முறையே துப்பகுல வரதப்ப நாயக்கர், துப்பகுல வேங்கடப் பெருமாள் நாயுடு, துப்பகுல பெத்த ராமபத்திர நாயுடு, துப்பகுல ராமகிருஷ்ணப்ப நாயுடு ஆகியோர் செஞ்சி நாயக்கர்களாய் இருந்தனர். 

நாயக்கர் ஆட்சிக்குப் பின் செஞ்சி

கி.பி.1649-இல் சுல்தான் ஆதில்ஷாவால் அனுப்பபட்ட மீர்ஜும்லாவின் தலைமையிலான பீஜப்பூர்ப் படை செஞ்சியை முற்றுகையிட்டது. துப்பகுல ராமகிருஷ்ணப்ப நாயுடுவிடமிருந்து வெகு எளிதில் செஞ்சியைக் கைப்பற்றியது. செஞ்சியில் நாயக்கர் ஆட்சி மறைந்தது. 

பின்னர், கி.பி.1678 சத்திரபதி சிவாஜியால் கைப்பற்றப்பட்ட செஞ்சி 1998 வரை மராட்டியர் ஆட்சியில் இருந்தது. 1698-இல் முகலாயர் கைக்கு மாறியது. "நசுரத்கட்டா" என்று பெயர்மாற்றமும் பெற்றது. 1700-இல் முகலாயர்களின் பிரதிநிதியாக ஸ்வரூப் சிங் என்ற இராஜபுத்திரத் தளபதி செஞ்சியின் நிர்வாகத்தை ஏற்றார். நாட்டார் வழக்கில் சர்ப்ப சிங்கு எனப்பட்ட இவரது மகனே தேசிங்கு ராஜா எனப்படும் தேஜ் சிங் ஆவார். தேசிங்குக்குப் பிறகு ஆற்காடு நவாப் வழியாக ஆங்கிலேயர் கைக்கு வந்து சேர்ந்தது செஞ்சி.

- யுவபாரதி 


(அடுத்தது)

October 16, 2011

நாம்தேவ் லக்ஷ்மண் டசால் : ஒடுக்கப் பட்டவர்களின் மொழி

நாம்தேவ் லக்ஷ்மண் டசால்
"சமூகப் போராட்டங்களின் இலக்கு துயரத்திலிருந்து விடுவிப்பது என்றால்,  அதற்குத் தேவையானது கவிதை; ஏனெனில் அதுவே மகிழ்ச்சியை வலுவாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்துகிறது" என்று கூறிய நாம்தேவ் லக்ஷ்மண் டசால் (Namdeo Laxman Dhasal) மூத்த மராட்டிக் கவிஞர்களில் ஒருவர்; தலித் இலக்கிய முன்னோடி; இந்திய தலித் சிறுத்தைகள் அமைப்பின் நிறுவனர்களுள் ஒருவர்; தம் இலக்கியப் பணிகளுக்காக நடுவண் அரசின்  'பத்மஸ்ரீ' விருதும் பெற்றவர்.

1949-இல் மராட்டிய மாநிலம் பூனாவுக்கு அருகில் பூர் கினேர்கர் என்ற கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மஹர் சாதியில் பிறந்தவர் நாம்தேவ். இவரது பள்ளிப் பருவம் மும்பையின் கோல்பீட்டா பகுதியில் கழிந்தது. மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதி என அறியப்படும் அங்குதான் நாம்தேவின் தந்தை ஒரு இறைச்சிக் கடையில் வேலை பார்த்தார். குடும்பத்தின் வறுமை காரணமாக நாம்தேவால் பள்ளிப் படிப்பைக் கூட நிறைவு செய்ய முடியாமல் போனது.

இளம் பருவத்தில் ராம் மனோகர் லோகியாவின் சோஷலிசக் கருத்துகளில் பற்று கொண்டிருந்த நாம்தேவ், பிறகு மார்க்சியத்தால் கவரப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரப் பணியாற்றினார்.  எஸ்.ஏ.டாங்கேவால் அடையாளம் காணப்பட்டவரும், வெகுவாக அறியப்பட்ட கம்யூனிஸ்ட் பாடகருமான ஷாகிர் அமர் ஷேக்கின் மகள் மல்லிகாவை மணந்தார் நாம்தேவ்.

அனைத்து அரசியல் இயக்கங்களும் உயர்சாதி இந்துத் தலைமை மற்றும் பூர்ஷ்வாத் தனத்தால் வரையறுக்கப்பட்ட எல்லைகளையே கொண்டிருப்பதாக உணர்ந்த நாம்தேவ், அமெரிக்காவில் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக இயங்கிய கருஞ் சிறுத்தைகள் (Black Panthers Party) அமைப்பு ஏற்படுத்திய தாக்கத்துடனும், அம்பேத்கரியப் புரிதலுடனும் அருண் காம்ப்ளே, ராஜா தாலே முதலானவர்களுடன் இணைந்து 1972 -இல் ''தலித் சிறுத்தைகள்'' (Dalit  Panthers of India) என்ற அமைப்பை நிறுவினார். அனைத்து மட்டங்களிலும் உள்ள உயர்சாதித் தனத்தைக் கேள்விக்குட்படுத்தும் வகையிலான பல துண்டுப் பிரசுரங்களை வெளியிடுதல், போராட்டங்களை வழிநடத்துதல் முதலான தனது தீவிர அரசியல் செயல்பாடுகளால், மகாராஷ்டிரத்தில் மட்டுமின்றி அனைத்திந்திய அளவில் பெரும் தாக்கத்தைச் செலுத்தியது தலித் சிறுத்தைகள் இயக்கம். அவசர நிலைக் காலத்தில் போலீசாரால் தலித் சிறுத்தைகள் அமைப்பின் மீது 300க்கும் மேற்பட்ட போலி வழக்குகள் போடப்பட்டன. பிரதமர் இந்திரா காந்தியை நேரடியாகச் சந்தித்து, அனைத்து வழக்குகளையும் நீக்கச் செய்தார் நாம்தேவ். அவரது பிரியதர்ஷினி என்ற கவிதை நூல் இந்திரா காந்தியைப் பற்றியதே. பிறகு பற்பல கருத்து முரண்கள் மற்றும் தேர்தல் அரசியல் பங்கேற்பு காரணமாக இவ்வியக்கம் பற்பல பிளவுகளைச் சந்தித்தது. தற்போது இந்தியக் குடியரசுக் கட்சியில் இயங்கி வருகிறார் நாம்தேவ் டசால்.

இலக்கியத்தைப் பொறுத்த வகையில், பல தலித் எழுத்தாளர்களைப் போல பாபுராவ் பாகூலின் எழுத்துகளால் தாக்கம் பெற்றவர் நாம்தேவ். இவருக்குப் பெரும் இலக்கிய அந்தஸ்தையும் மக்கள் அபிமானத்தையும் பெற்றுத் தந்த இவரது முதல் கவிதை தொகுதியான கோல்பீட்டா (Golpitha) 1973-இல் இவரது 24 ஆம் வயதில் வெளிவந்தது. 

மராட்டி இலக்கிய உலகில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய நூல் அது. மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதி என அறியப்படும் கோல்பீட்டாவின் தலித் வாழ்வை அதற்கே உரிய மொழியில் தீராக் கோபத்தோடு வெளிப்படுத்தும் கவிதைகளைக் கொண்டது அது. வெளிவந்த அதே ஆண்டு மகாராஷ்டிர மாநில அரசின் விருதையும், அடுத்த ஆண்டு சோவியத் லேன்ட் நேரு விருதையும் பெற்றது கோல்பீட்டா.

ஆனந்த் டெல்டும்டே
"அதன் ஒவ்வொரு வார்த்தையும், அதில் பொதிந்திருந்த ஆற்றலும், சீற்றமும், ஏற்கனவே நிறுவப்பட்டிருந்த இலக்கிய ஒளிவட்டங்களுக்கு முற்றிலும் அன்னியமானதாகவும், அதிர்ச்சியளிப்பதாகவும் இருந்தது. உழைக்கும் மக்களின் மொழியில் திருவுருக்களை உடைக்கும் தன்மையிலான படிமங்களாலும், அடங்க மறுக்கும் சொற்களாலும், கடுங்கோபத்தாலும் அதிகாரத்திலிருந்த நிறுவனங்களை வேர் வரை அசைத்தது," என்று கோல்பீட்டாவை மதிப்பிடுகிறார் விமரிசகரும் தீவிர தலித் இயக்கச் செயற்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே.

'கோல்பீட்டா'வைத் தொடர்ந்து துஹி யத்தா கஞ்சீ? (எவ்வளவு படித்தவர் நீங்கள்?), மூர்க் மாதார்யானே (முட்டாள் முதியவன்), மீ மார்லே சூர்யாச்யா ரதாச்சே கோடே சாத் (நான் சூரியனின் ஏழு குதிரைகளைக் கொன்றுவிட்டேன்)  உட்பட ஒன்பது கவிதைத் தொகுதிகளையும், ஹாட்கீ ஹாட்வாலா, நெகட்டிவ் ஸ்பேஸ் ஆகிய நாவல்கலையும் வெளியிட்டுள்ளார் நாம்தேவ் டசால். அந்தாலே ஷதக் (குருட்டு நூற்றாண்டு), அம்பேத்கரி சால்வால் (அம்பேத்கரிய இயக்கம்) ஆகிய இவரது கட்டுரை நூல்களும் குறிப்பிடத் தக்கவை.

1973,1974,1982,1983 ஆகிய ஆண்டுகளில் இலக்கியத்துக்காக மகாராஷ்டிர மாநில அரசின் விருதுகளும், 1974இல் கோல்பீட்டாவூக்காக சோவியத் லேண்ட் நேரு விருதும், 1999ஆம் ஆண்டு உயரிய பத்மஸ்ரீ விருதும், 2004ஆம் ஆண்டு சாகித்ய அகாடமியின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றுள்ளார் நாம்தேவ் டசால்.

நாம்தேவின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து "Namdeo Dhasal : Poet of the Underworld" என்ற பெயரில் வெளியிட்டவரும், ஆவணப்பட இயக்குநரும், கவிஞருமான திலீப் சித்ரே (1938-2009) "மராட்டி மொழியில் மட்டுமன்று, இந்தியக் கவிதை நூல்களிலேயே கோல்பீட்டா டி.எஸ். எலியட்டின் 'பாழ்நில'த்திற்கு ஒப்பானது" என்கிறார்.

திலீப் சித்ரே
 "2001 ஆம் ஆண்டு ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் நடந்த சர்வதேச இலக்கிய விழாவில் வாசிக்கப்பட்ட நாம்தேவின் கவிதைகள் பெரும் அதிர்வை ஏற்படுத்தின. அத்தகையவரின் கவிதைகள் பெங்காளியைத் தவிர்த்து பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படவே இல்லை என்பதைக் கண்டு, அவரது எழுத்தின் வீரியத்தை உணர்ந்தவன் என்ற வகையிலும், மொழிபெயர்ப்பாளன் என்ற வகையிலும் பெரும் மன அழுத்தத்தை உணர்கிறேன்" ஒரு கட்டுரையில் வருந்தியுள்ளார் திலீப் சித்ரே.


-யுவபாரதி 


தொடர்புடைய சுட்டிகள் :    
கவிதைப் புத்தகம் (நாம்தேவ் டசாலின் கவிதை)
மரங்களின் அமைதியற்ற ஆன்மா (திலீப் சித்ரேவின் கவிதை)


October 15, 2011

தமிழகத்தில் மனித உரிமைகள் : கருத்தரங்கம் - ஒலிப்பதிவு

அருள் எழிலன்,பா.செயப்பிரகாசம், அ.மார்க்ஸ்,செல்வராஜ் 
15.10.2011 அன்று காலை சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் "தமிழகத்தில் மனித உரிமைகள்" என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக மீனவர் பிரச்சனைகள் குறித்து பத்திரிகையாளர் அருள் எழிலன், மரண தண்டனை எதிர்ப்பு குறித்து மூத்த எழுத்தாளரும், மரண தண்டனைக்கு எதிரான படைப்பாளிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான பா.செயப்பிரகாசம், அணுமின் நிலைய எதிர்ப்பு குறித்து கூடங்குளம் அணுமின் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பாதிரியார் எக்ஸ்.டி.செல்வராஜ், பரமக்குடி தலித் படுகொலைகள் குறித்து எழுத்தாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான அ.மார்க்ஸ் ஆகியோர் பேசினர்.

கவிஞர் கவின்மலர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கவிஞர் தி.பரமேசுவரி, "தடாகம்" அமுதரசன் ஆகியோர் செய்திருந்தனர்.

இந்நிகழ்வின் ஒலிப்பதிவு இது.




ஒலிப்பதிவு : யுவபாரதி.

October 07, 2011

தாமஸ் டிரான்ஸ்டிரோமர் : நோபல் பரிசு வென்ற ஸ்வீடன் கவி


தாமஸ் டிரான்ஸ்டிரோமர்

நோபல் பரிசின் பிறந்தகமான ஸ்வீடன் இருபத்தாறு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அப்பரிசைப் பெற்றிருக்கிறது. இதற்கு முன் 1974ஆம் ஆண்டு ஸ்வீடனைச் சேர்ந்த எய்விண்ட் ஜான்சனும் ஹேரி மார்ட்டின்சனும் நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

2011ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ள தாமஸ் கோஸ்ட்டா டிரான்ஸ்டிரோமர் (Tomas Gosta Transtromer) ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் 1931ஆம் ஆண்டு பிறந்தவர். பள்ளி ஆசிரியையான தாயாரின் பராமரிப்பில் வளர்ந்தவர். ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தில் உளவியல் படித்துப் பட்டம் பெற்றவர். உளவியலாளராகப் பணியாற்றியவர். சிறந்த பியானோ இசைக் கலைஞர். 1984ல் போபால் விஷவாயுத் தாக்குதலை அறிந்ததும் உடன் இந்தியா வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றவர்  டிரான்ஸ்டிரோமர். 

ஸ்வீடிஷ் மொழியில் பதினைந்து கவிதைத் தொகுதிகளை எழுதியுள்ளார் டிரான்ஸ்டிரோமர். இவரது முதல் கவிதைத் தொகுதி "17 கவிதைகள்" (17 Poems) இவரது இருபத்து மூன்றாம் வயதில் வெளிவந்தது. இவரது "சாளரங்களும் கற்களும்" (Windows and Stones - 1966), "பெரும்புதிர்" (The Great Enigma - 2004), "அரைகுறை சொர்க்கம்" (The Half-finished Heaven - 2011) ஆகிய நூல்கள் குறிப்பிடத் தக்கவை. இவரது பெரும்பாலான கவிதைத் தொகுதிகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. எனினும் இவர் அமெரிக்காவில் அதிகம் அறியப்பட்டவரில்லை. ஆங்கிலம் தவிர உலகின் அறுபது மொழிகளில் இவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இவரது கவிதைத் தொகுதிகளில் இவரது நெருங்கிய நண்பரும் கவிஞருமான ராபர்ட் ப்ளை (Robert Bly) யின் மொழிபெயர்ப்பே சிறந்தது என்பர்.

"சற்றே இருண்மையும் வசீகரமும் கொண்ட டிரான்ஸ்டிரோமரின் கவிதைகள் தனிமைப்பாட்டையும் தன்னடையாளத்தையும் மனஎழுச்சியோடு வெளிப்படுத்துபவை என்பதுடன், செறிவான படிமங்களால் புதுத்தடம் அமைத்துத் தந்தவை, நவீனத்துவத்துக்கு மட்டுமின்றி ஆழ்மனப் பதிவியலுக்கும் (Surrealism) வலுச்சேர்த்தவை" என்பர். 

மொழிபெயர்ப்பிலும் வீரியம் குறையாத இவரது கவிதைகள் ஸ்வீடனின் மிக நீண்ட குளிர்காலத்தை அழகுற வர்ணிப்பவை என்றும், தொட்டுணரத்தக்க வகையில் இயற்கையின் அழகைக் காட்டுபவை என்றும் விமரிசகர்கள் புகழ்கின்றனர். 

"அமெரிக்காவிற்கு ராபர்ட் ஃப்ராஸ்ட் போல ஸ்வீடனுக்கு தாமஸ் டிரான்ஸ்டிரோமர்; ஸ்வீடனின் தேசிய ஆளுமை இவர்; ஸ்வீடனின் நிலப்பரப்பு இவரது கவிதைகளில் விரவிப் பிரதிபலிக்கிறது" என்கிறார் கிராண்டா (Granta) இலக்கிய இதழின் ஆசிரியர் ஜான் ஃப்ரீமேன். 

"சில கவிஞர்களே உண்மையில் உலகக் கவிதைகளை எழுதுகிறார்கள்; அத்தன்மை இயல்பாகவே இவரது கவிதைகளில் ஊடாடிச் செல்கின்றன; தீவிரத் தன்மையும் திறந்த மனமும் கொண்ட தேர்ந்த கவிஞர் டிரான்ஸ்டிரோமர்" என்கிறார் இவரது கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் பெரிதும் பதிப்பித்த டேனியல் ஹால்பெர்ன். 

1990ஆம் ஆண்டு தாக்கிய பக்கவாத நோயால் கைகால்களின் பாதிப்போடு, பேசும் திறனையும் இழந்தார் டிரான்ஸ்டிரோமர். எனினும் கவிதைகளில் இவரது தீவிரம் முன்னிலும் அதிகம் தொடர்ந்தது.

டிரான்ஸ்டிரோமருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பொழுது ஓலா லார்ஸ்மே என்ற நாவலாசிரியர் சொன்னார் : " அந்த இரயில் இந்த நிறுத்தத்தை ஏற்கனவே கடந்து சென்றுவிட்டது - முதியவரான இவரால் அதைப் பிடிக்கவும் முடியாது - என்று சிலர் நினைத்தனர்; ஆனால் சர்வதேச அளவில் கவிதைகளுக்கான இவரது பங்கு இப்போது உணரப்பட்டுள்ளது. "

- யுவபாரதி

பரமக்குடி படுகொலைகள் : உண்மை அறியும் குழுவின் அறிக்கை



(பரமக்குடி படுகொலைகள் தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்ட ஓவியர் சந்துருபேராசிரியர்கள் டி.தருமராஜன், சி.லட்சுமணன், அன்புச்செல்வம், ஸ்டாலின் ராஜாங்கம்எழுத்தாளர்கள் யாழன் ஆதி, ஆதவன் தீட்சண்யா, யுவபாரதி, கவின்மலர், சந்திரா, முத்துக்கிருஷ்ணன், ஜெகன்னாதன்வழக்குரைஞர்கள் பால்ராஜ், பகத்சிங், ராமகிருஷ்ணன்பத்திரிகையாளர்கள் பிரேமா ரேவதி, வையவன் உள்ளிட்ட உண்மை அறியும் குழுவினரின் அறிதல்களின் (Findings) அடிப்படையில்...)



2011 செப்டம்பர் 11ம் நாள் பரமக்குடியில் காவல்துறை நிகழ்த்திய கலவரத்தினை முழுமையாக ஆராய்வதற்காக கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் அடங்கிய 25 பேர் கொண்ட குழுவினர் பரமக்குடியில் பாதிக்கப்பட்ட கிராமங்கள், பாதிக்கப்பட்ட மக்கள், அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்துத் திரட்டிய செய்திகளின் அடிப்படையில் கீழ்கண்ட தரவுகளும், பரிந்துரைகளும் முன் வைக்கப்படுகின்றன.  21.09.11 காலை 11 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பிற்காக வெளியிடப்படும் சுருக்கமான அறிக்கை இது.  

• பரமக்குடியில் காவல்துறை நடத்திய வன்முறை குறித்து ஊடகங்களும், அரசாங்கமும் வெளியிட்ட தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை அல்லது மேலோட்டமானவை என்பதை எங்களின் ஆய்வின் மூலம் கண்டோம்.  

• திரு. ஜான்பாண்டியன் அவர்களைக் கைது செய்ததால் அவரது ஆதரவாளர்கள் 1000 பேர் சேர்ந்து மறியல் செய்து போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்து கலவரங்களில் ஈடுபட்டனர் என்று கூறுவது முழுக்க கட்டுக்கதை கற்பனை என்பதை நேரடியான சாட்சியங்கள் (மக்கள், உள்ளூர் தலித் அமைப்புகள், வீடியோ மற்றும் புகைப்பட சாட்சியங்கள்) மூலம் அறிந்தோம். ஜான் பாண்டியனை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் சுமார் 20லிருந்து 30 பேர் மட்டுமே. ஆர்ப்பாட்டம் நடக்கும் போது அஞ்சலி செலுத்தும் பல்வேறு அமைப்பினர் வாகனங்களில் சென்றும் வந்தும் கொண்டிருந்தனர். அதே போல் இம்மானுவேல் குரு பூஜைக்காக போக்குவரத்து வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டு குறிப்பிட்ட அச்சாலை குருபூஜைக்கான பயன்பாட்டில்தான் இருந்து வந்தது. எனவே அன்றைக்கு  ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் பெரும் திராளனவர்கள் என்று சொல்வதோ, போக்குவரத்திற்கு இடையூறு செய்தவர்கள் என்று கூறுவதோ காவல்துறையின் வன்முறையை நியாயப்படுத்த வலிந்து சொல்லப்படும் பொய் என்றே அறிகிறோம்.  

• மறியல் செய்தவர்களைக் கலைப்பதற்கான முன்னெச்சரிக்கை சமிக்ஞைகள் எதையும் செய்யாமல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதை களத்தரவுகள் நிரூபிக்கின்றன. முதல் சூடு நெற்றியை நோக்கியே செலுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான உடல்களில் குண்டு காயம் இடுப்புக்கு மேலே தான் உள்ளது. காலை சுமார் 11.30 மணியளவில் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதும் கூட்டம்சிதறியது. ஆனால் மாலை 5 மணி வரை காவல்துறை துப்பாக்கி சூட்டை மீண்டும் தனித்த முறையில் நடத்தியிருக்கிறது. அதில் மறியலோடு தொடர்பில்லாமல் கையில்கிடைப்போரையெல்லாம் சுட்டதோடு, அவர்களை பிடித்து வந்து கடுமையாகத் தாக்கவும் செய்துள்ளனர் (வீடியோ ஆதாரம்) இவ்வாறு மாலை 4 மணியளவில் தனது இரு சக்கர வாகனத்தை எடுக்க வந்த தீர்ப்புக்கனி என்ற டிப்ளமோ படித்த 21 வயது இளைஞரைப் பிடித்து அடித்தே கொன்றுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.  

• ஊடகங்களில் வெளியானது போல் காவல் துறையினரது வஜ்ரா வாகனம் பிற வாகனங்களும் மக்களால் தான் கொளுத்தப்பட்டன என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை. தங்களது துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த விரும்பிய காவல் துறையினரே இதில் ஈடுபட்டிருக்கலாம் என்பதைப் பலரின் சாட்சியங்கள் மூலம் சந்தேகமாக கருதுகிறது. ஏனெனில் வஜ்ரா வாகனம் துப்பாக்கிச் சூட்டிற்குப் பின் மக்கள் சிதறி ஓடிவிட்டதால் முழுக்க முழுக்க காவல்துறை கட்டுப்பாட்டில்தான் இருந்தது என்பதை தக்கசான்றுகள் மூலம் அறிகிறோம்.  

• சட்டபேரவையில் முதலமைச்சரும், ஊடகங்களும் தெரிவித்ததைப் போல இது இனக்கலவரம் அல்ல. மாறாக எளிமையாக கையாண்டிருக்கக் கூடிய விசயத்தை சிக்கலாக மாற்றிய காவல்துறையின் வன்முறை என்றே சொல்ல முடிகிறது. ஒடுக்கப்பட்ட தேவேந்திரகுல வேளாளர்களின் அரசியல் எழுச்சியை மட்டுப்படுத்துவது அதன் மூலம் இம்மானுவேல் குருபூஜைக்காக திரளும் அந்த வகுப்பார் மீது சாதிக் காழ்ப்பு கொண்டு செயற்படும் ஆதிக்க வகுப்பினரைத் திருப்திபடுத்துவது என்பதே அரசாங்கம் மற்றும் காவல்துறை ஆகியவற்றின் நோக்கம் என்பதை அறிக்கையின் மூலம் தெரிகிறது.  

• துப்பாக்கிச் சூட்டிலும், காவல்துறையின் தாக்குதலாலும் பாதிக்கப்பட்டோரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவில்லை. உரிய 3சிகிச்சையும் உடனடியாக அளிக்கவில்லை. தாக்கப்பட்ட குடும்பத்தாருக்கு உரிய தகவல்களை அளிக்கவில்லை  என்று அலைக்கழிக்கப்பட்டுள்ளனர், ஒருவரை உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதை அறியாமலேயே பிணவறைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.  

• துப்பாக்கிச்சூடு, தாக்குதல் போன்றவற்றோடு நில்லாத காவல்துறை பல்வேறு கிராமங்களிலுள்ள தலித்துகள் மீது பொய் வழக்குகள் புனைந்து அவர்களை கைது செய்யத் தேடிக் கொண்டிருப்பதால் எந்த கிராமத்திலும் இப்போது ஆண்கள் இல்லை. பெண்களும், குழந்தைகளும் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளதை எங்கள் குழுவினர் அறிந்தோம். தலித் மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தும் பொருட்டு காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக எச்.பரளை என்ற கிராமத்தில் 18.09.2011ம் நாளில் பயிற்சி என்ற பெயரில் 30க்கும் மேற்பட்ட போலீசார் தெருவுக்குள் இறங்கி, கற்களை வீசுதல், டயர்களை எரித்தல், இரு தரப்பு மோதல் என்றெல்லாம் இரண்டு மணி நேரமாக முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் பெண்களும், குழந்தைகளும் மட்டுமே இருந்த நிலையில் அச்சமூட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

• வன்முறையாளர்கள் சுட்டதாக காவல்துறை கூறுகிறது. ஆனால் சுடப்பட்ட பேரில் ஒருவர் கூட ஜான்பாண்யன் ஆதரவாளர்களாக இல்லை என்பது  குறிப்பிடத்தக்கது.  

• இத்துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டோர் மற்றும் காயமுற்றோர் குறித்த முழுமையான தகவல்களைச் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களுக்கோ பத்திரிகைகளுக்கோ இதுவரை காவல்துறை அதிகாரப் பூர்வமாக தெரிவிக்கவில்லை. மாறாக அலைக்கழிப்பை ஏற்படுத்துகிறது.  

• கலவரத்திற்கு காரணமாக தமிழக அரசு கூறும் பள்ளப்பச்சோரி சம்பவம் முழுக்க இட்டுக்கட்டப்பட்டது. அச்சம்பவத்திற்கும் பரமக்குடி வன்முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதே எம்குழுவின் ஆய்வு. பள்ளப்பச்சேரியில் தேவரை இழிவுப்படுத்தி எழுதியதாக கூறப்படுவதற்கும், பழனிக்குமாருக்கும் எந்த தொடர்பும் இல்லை அவரை இழிப்படுத்தி எழுதியதையோ, எழுதியவரையோ கண்ணுற்றவர் எவருமில்லை. மேலும் எழுதியதாகக் கூறப்படும் இடம் முழுக்க முழுக்க தேவர் வகுப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள இடம். எனவே இச்சம்பவத்திற்கும் பரமக்குடி வன்முறைக்கும் தொடர்பில்லை. ஜான்பாண்டியனை தக்க பாதுகாப்போடு குருபூஜைக்கு காவல்துறையினர் அழைத்து வந்திருக்க முடியும். 

பரிந்துரைகள் 

• காவல்துறையின் தாக்குதலால் காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் வழக்குகளுக்கு பயந்து மருத்துவமனையில் சேர்ந்து உரிய சிகிச்சை பெற முடியாத நிலையில் உள்ளனர். மேலும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் வீடு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். எனவே தலித்துகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்.  

• தாக்குதலில் இறங்கிய காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். வழக்கு பதிவு செய்தால் அதைSC/STவன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு மாற்றி பாதிக்கப்பட்டோருக்கு அதனடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும்.  

• இறந்த குடும்பங்களுக்கு 5 லட்சம் நிவாரணமும், தகுதியானோருக்கு தகுதியான அரசுப் பணிகளையும் வழங்க வேண்டும்.  

• இத்தாக்குதல் குறித்து விசாரிக்க அரசு நியமித்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கமிஷன் மீது நம்பிக்கை இல்லை. எனவே சி.பி.ஐ விசாரணை வேண்டும்.  

• விரிவான பொது விசாரணை வேண்டும். 


-  யுவபாரதி

போருக்குப் பிந்திய இலங்கையும் தமிழ் ஊடகங்களும் : இலங்கை தினக்குரல் ஆசிரியருடன் கலந்துரையாடல் - ஒலிப்பதிவு

வீ.தனபால சிங்கம் & அ.மார்க்ஸ் 

''போருக்குப் பிந்திய இலங்கையும் தமிழ் ஊடகங்களும்" என்ற தலைப்பில் இலங்கையிலிருந்து வெளிவரும் தினக்குரல் நாளிதழின் ஆசிரியர் வீ.தனபால சிங்கம் அவர்களுடனான கலந்துரையாடலை பேரா.அ.மார்க்ஸ் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வு 06.10.2011 அன்று மாலை 6  மணியளவில் சென்னை எழும்பூர் இக்சா மையத்தில் நடைபெற்றது. கலந்துரையாடலுக்கு முன்பாகப் போருக்குப் பிந்திய தற்போதைய இலங்கையில் தமிழ் ஊடகங்கள் எதிர்கொண்டுவரும் சிக்கல்கள் குறித்து வீ. தனபால சிங்கம் பேசினார். அது தொடர்பாக அவருடன் நிகழ்ந்த கலந்துரையாடலில் பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வின் ஒலிப்பதிவு இது. 




ஒலிப்பதிவு - யுவபாரதி 

October 05, 2011

மரண தண்டனைக்கு எதிரான படைப்பாளிகள் இயக்கத்தின் உண்ணாப் போராட்டம்


மனித உயிர் பறிப்பது மனித நேயத்துக்கும் மானுட குல அறத்துக்கும் எதிரானது.   மனித உயிர் பறிக்க தனி மனிதருக்கோ, சமூகத்துக்கோ. அரசுக்கோ எந்த உரிமையும் இல்லை. ஆனால் மரணதண்டனையை அல்லது தூக்குத் தண்டனையை அரசே நிறைவேற்றுகிற போது அது அறமான செயலாகவும் சட்டரீதியாகவும் கருதப்படுவது எவ்வகையில் நியாயம்?  நியாயமில்லை எனப் பதில் கூறும் முகமாக மரண தண்டனையை உலகில் 135 நாடுகள் ரத்து செய்துள்ளன. காந்திதேசம் என்ற கிரீடத்தை பெருமையாகச் சூடிக் கொண்டிருக்கும் இந்தியா இதுவரை மரணதண்டனையை ரத்து செய்யவில்லை.

இப்போது ராஜிவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவர் தூக்குக் கயிற்றை எதிர்நோக்கி நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சிறையிலிருந்த காலம் இருபது ஆண்டுகள். வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருந்தால் கூட இவர்களின் சிறைக்காலம் முடிந்து போயிருக்கும். எந்த ஒரு மனித உயிருக்கும் மரணதண்டனை வழங்க எவருக்கும் உரிமையில்லை எனும் உன்னதமான கருத்து உலகின் மனச் சாட்சியாக மேலெழுந்து வருகையில்...                                     

இந்திய அரசே , மரண தண்டனையை ரத்து செய் !


பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகியோரது மரண தண்டனையை நீக்க 


தமிழக அரசே,  அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேறுக!


என்ற கோரிக்கையை முன்வைத்து 09.10.2011 அன்று சென்னை கோயம்பேட்டில் ஒருநாள் உண்ணாப் போராட்டம் மேற்கொள்ள முடிவு செய்யப் பட்டுள்ளது. இந்தியா அரசமைப்புச் சட்டப் பிரிவு 161-இல் வழங்கியுள்ள அதிகாரத்தின்படி தமிழக அமைச்சரவை கூடித தீர்மானம் நிறை வேற்றி அதனை ஆளுநருக்கு அனுப்பினாலேயே இத்தூக்குத் தண்டனையை நீக்க முடியும் என்று சட்ட வல்லுனர்கள் கருதுகிறார்கள். இக்கோரிக்கையை வலியுறுத்தி சென்னை கோயம்பேடு பேருந்துநிலையம் அருகிலுள்ள ஆட்டோ கேரேஜ்ஜில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மரண தண்டனைக்கு எதிரான படைப்பாளிகள் இயக்கம் சார்பில் நடைபெறவுள்ள உண்ணாப் போராட்டத்தில் பங்கேற்குமாறு படைப்பாளிகள் அனைவரையும் அழைக்கிறோம்.


பா.செயப்பிரகாசம் 

அமைப்பாளர்களுக்காக.


காஞ்சிபுரம் : இலக்கியக் களம் நடத்திய கருத்தரங்கம் - ஒலிப்பதிவு

அமுதகீதன், யாழன் ஆதி, அமிர்தம்சூர்யா, குட்டிரேவதி 
13.12.2010 அன்று காஞ்சிபுரத்தில் இலக்கியக் களம் சார்பில் மொழி திரியும் கவிதைவெளியில் திசைமுகம் தேடல் என்ற நிகழ்வு காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. கவிஞர் அமுதகீதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு வந்தவர்களை கவிஞர் சூர்யமித்ரன் வரவேற்றார்.

முதலில் பேசிய கவிஞர் யாழன் ஆதி"தலித்தியக் கவிதைகள் : அழகியல் - அரசியல்" என்ற தலைப்பில், தலித் அரசியலின் கடந்த கால வரலாறு, 90களில் தலித்தியச் சிந்தனை தமிழ் இலக்கிய உலகில் ஏற்படுத்திய தாக்கம், அம்பேத்கரியத் தத்துவ நிலைப்பாடுகளின் அடியொற்றி தலித்திய எழுத்துகள் பயணிக்க வேண்டியுள்ள கடப்பாடு ஆகியவற்றைப் பற்றிப் பேசினார்.

"இரண்டாயிரத்துக்குப் பின் தமிழ்க்கவிதை பகட்டு வெளிப் பறத்தலும் இருட்டைத் தோண்டி எடுத்தலும்" என்ற தலைப்பில் கருத்துரை வழங்கிய கவிஞரும் கல்கி வார இதழின் உதவி ஆசிரியருமான அமிர்தம் சூர்யா நவீன கவிதைகள் புரிந்து கொள்ளக் கடினமாக உள்ளன என எழும் வழக்கமான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் முகமாக அவற்றின் மொழிப் பயன்பாடு மற்றும் குறியீட்டுத் தன்மை ஆகியவற்றை விளக்கியதோடு, வாசிப்பிற்கு அது வாசகனிடம் எதிர்பார்க்கிற எத்தனங்களின் உள்ளீடு குறித்துப் பேசினார்.

"உடலை வாசித்தலும் எழுதுதலும்" என்ற தலைப்பில் கவிஞர் குட்டிரேவதி கருத்துரைத்தார். பெண்ணியம் மற்றும் தலித்தியம் சார்ந்த சமகாலப் படைப்புகளில் உடலரசியலின் முக்கியத்துவம் பற்றியும் பாலுறவு வேட்கையை எழுதுவது மற்றுமே உடலரசியல் ஆகாது என்றும் குறிப்பிட்டார்.
நிகழ்விற்கான ஏற்பாடுகளை எழுத்தாளர் எக்பர்ட் சச்சிதானந்தமும் கவிஞர் அமுதகீதனும் செய்திருந்தனர்.இந்நிகழ்வின் ஒலிப்பதிவு இது.

mp3 வடிவில்...



ஒலிப்பதிவு : யுவபாரதி

October 04, 2011

ம.பொ.சி. நினைவு நாள் விழா மற்றும் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா - ஒலிப்பதிவு

ஞானசிவம்,பெ.சு.மணி,இல.கணேசன்,ஊரன் அடிகள்,
எஸ்.கே.பாலசுப்ரமணியன்,ஏ.நடராசன்,கலவை கோபாலகிருஷ்ணன் 
03.10.2011 அன்று சென்னை மயிலாப்பூர் லேடி சிவசாமி கலாலயா அரங்கில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் 16-வது நினைவு நாள் விழா மற்றும் அவரது ஐந்து நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும் மூத்த வழக்கறிஞருமான எஸ்.கே.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வள்ளலார் நெறி பரப்புநர் ஊரன் அடிகள், சென்னை வானொலி நிலைய மேனாள் இயக்குனர் ஏ. நடராஜன், பொற்றாமரை இலக்கிய அமைப்பின் இல.கணேசன், பாரதியியல் ஆய்வறிஞர் பெ.சு.மணி ஆகியோர் பேசினர். கலவை கோபாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.


இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ம.பொ.சி.யின் பெயரன் தி.ஞானசிவம் செய்திருந்தார். விழாவைக் கவிஞரும் ம.பொ.சி.யின் பெயர்த்தியுமான தி.பரமேசுவரி தொகுத்து வழங்கினார்.


இவ்விழாவின் ஒலிப்பதிவு இது. 







ஒலிப்பதிவு - யுவபாரதி

October 03, 2011

திருவண்ணாமலை : இசை அறிஞர் மம்மது பேச்சு - ஒலிப்பதிவு

மம்மது 
திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல் நிலைப் பள்ளியில் 31.07.2011 அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மதுரையைச் சேர்ந்தவரும் இசை அறிஞருமான  மம்மது பேசினார். அதன் ஒலிப்பதிவு இது.

இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை எஸ்.கருணா உள்ளிட்ட த.மு.எ.க.ச. தோழர்கள் செய்திருந்தனர்.

mp3 வடிவில்...



ஒலிப்பதிவு - யுவபாரதி

காஞ்சிபுரம் : ம.பொ.சி. குறித்த கருத்தரங்கம் - ஒலிப்பதிவு

ம.பொ.சி.
09.01.2011 அன்று காஞ்சி இலக்கியக் களம் சார்பில் ம.பொ.சி. குறித்த கருத்தரங்கம் காஞ்சிபுரம் பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்குக் காஞ்சி அமுதன் தலைமை ஏற்றார். அமுதகீதன் வரவேற்றார். தமிழரசுக் கழகத்தில் இயங்கிய சாம்பசிவம், ம.பொ.சி. இலக்கியப் பேரவை நிறுவனர் க.உ.கிருஷ்ணமூத்தி, தி.பரமேசுவரி ஆகியோர் பேசினர். எக்பர்ட் சச்சிதானந்தம் நன்றி கூறினார்.

இந்நிகழ்வின் ஒலிப்பதிவு இது.

mp3 வடிவில்... 




ஒலிப்பதிவு - யுவபாரதி

October 02, 2011

"தமிழ் - நிலமும் இனமும்" நூல் விமரிசனக் கூட்டம் - ஒலிப்பதிவு

பழந் தமிழகம் 
தமிழ்நாடு க​லை இலக்கியப் ​பெருமன்றத்தின் திருவண்ணாமலை கி​ளை சார்பில் கடந்த 30.01.2011 அன்று  இலா.வின்​சென்ட் எழுதிய  "தமிழ் - நிலமும் இனமும்" என்ற நூல் குறித்த விமரிசனக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு தமிழ்நாடு க​லை இலக்கியப் ​பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் கவிஞர் தி.பர​மேசுவரி தலைமையேற்றார். இரவி, யுவபாரதி, இரவீந்திர பாரதி, பழனி​வேள் ஆகியோர் கருத்துரைத்தனர்.

இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பெ.அன்பு, சு.பி​ரேம்குமார் ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்வின் ஒலிப்பதிவு இது.

mp3 வடிவில்...






ஒலிப்பதிவு - யுவபாரதி