Showing posts with label கமல். Show all posts
Showing posts with label கமல். Show all posts

November 27, 2010

தமிழ்த் திரையுலகில் பிற மொழியாளர்

ஆந்திர, கருநாடக, கேரள நடிகர் சங்கங்கள் முறையே தெலுங்கு, கன்னட, மலையாள நடிகர் சங்கங்களாக இருக்க, தமிழ்நாடு நடிகர் சங்கம் மட்டும் தென்னிந்திய நடிகர் சங்கமாக இருக்கிறது. இதே போல்தான் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையும். தெலுங்கு - கன்னட - மலையாளி இனத்தவர் அவரவராகவே இருக்கத் தமிழர்கள் மட்டும் திராவிடராக உணர்த்தப்பட்ட(படுகிற) காரணத்தால், பிற மொழிகள் பேசும் தென்னிந்தியத் தேசிய இனங்கள் தத்தமக்கான மாநிலங்கள் பெற்றுப் பிரிந்து சென்று விட்டபோதும், தமிழ்த் தேசிய இனம் மட்டும் திராவிட அடையாளத்தோடு திகழ்கிறது. அதைப் போன்றே மேற்படி சங்கங்களும் தென்னிந்திய அடையாளத்தோடு இயங்குகின்றன. மேலும் பிற தென்னிந்திய மொழித் திரையுலகங்கள் தத்தம் மொழி அடையாளத்தோடு இயங்குவதால் அங்கு இயங்க நேரும் தமிழ்த் திரையுலகக் கலைஞர்களுக்கு நேரும் அந்நிய உணர்வு, இங்கு பணியாற்ற நேரும் பிற மொழியாளர்களுக்கு நேருவதில்லை.

தமிழர்களிடம் எல்லோரும் ஓர் இனம் என்று சொல்லியே எல்லோரும் இந்நாட்டு மன்னரானார்கள். இன்னும் மன்னராகத் துடிக்கிறார்கள். மாநில எல்லைப் பிரிவினையின் போதும், தமிழர்களின் இந்த 'இனப்பற்றே ' தமிழர் பெருமளவில் வாழ்ந்த சித்தூர் - திருப்பதியைத் தெலுங்கரிடமும், கோலார் - பெங்களூர் - கொள்ளேகாலைக் கன்னடரிடமும், பாலக்காடு - தேவிகுளம் - பீர்மேட்டை மலையாளிகளிடமும் இழக்கக் காரணமானது. பாலாறு - பெண்ணையாறு - காவிரி - ஆழியாறு - அமராவதி - முல்லைப் பெரியாற்று நீர்ப்பிடிப்புப் பகுதிகளை நீரட்டிக் (தாரை வார்த்துக்) கொடுத்துவிட்டு எல்லைகளில் கையேந்தி நிற்கிறது தமிழகம். ஆந்திரத் தெலுங்கரிடமிருந்து ம.பொ.சி.யின் போராட்டத்தால் சென்னை காப்பற்றப்பட்டதும், மங்கலங்கிழாருடனான அவரது போராட்டத்தால் திருத்தணி மீட்கப்பட்டதும், மலையாளிகளிடமிருந்து குமரி மாவட்டத்தை மீட்க நடந்த போராட்டத்தில் 11 பேரை துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலி கொடுத்ததுமான வரலாறு இன்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

சில மாதங்களுக்கு முன்பு கமல்ஹாசனுக்குக் கேரள அரசு சார்பில் விருது வழங்குகையில், அந்நிகழ்வை அவரது நண்பர்களான மோகன்லால், ஜெயராம் உட்பட ஒட்டுமொத்த மலையாளத் திரையுலகமே புறக்கணித்தது நினைவிருக்கலாம். அம்மலையாளத் திரையுலகால் ஏற்கனவே புறக்கணிக்கப்பட்ட நடிகர் திலகன் மட்டுமே விதிவிலக்கு. அந்நிகழ்வில் நமக்குப் பெருமை மிக்கதும், நம்மை எள்ளலாக அழைக்க மலையாளிகள் பயன்படுத்துவதுமான 'பாண்டி' என்ற பெயரைச் சுட்டிக்காட்டித் தன்னைப் பாண்டிதான் என்று சொல்லிவிட்டு வந்தார் கமல்.

மலையாள நடிகர்களிலும் கூட ஜெயராம் தமிழகத்திலிருந்து கேரளத்திற்குக் குடிபெயர்ந்த தமிழ்க் குடும்பத்தில் பிறந்த தமிழர். ஆனால் சென்னையில் தன் வீட்டில் பணிபுரியும் தமிழ்ப் பெண்ணைப் 'போத்து' (எருமை) என்று மலையாள ஊடகங்ளுக்குச் சொல்லுமளவுக்கு மலையாளி.

ஆர்யா
சமீபத்தில் ஏஷியா நெட் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் நடிகர் ஆர்யா ஒரு கருத்துச் சொன்னார் :

"மலையாளத் திரைப்படங்களில் நடிப்பதற்கு நடிப்பு நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். எனக்குக் கொஞ்சம்தான் நடிக்கத் தெரியும். ஆனாலும் எனக்குத் தோதான பாத்திரங்கள் வழங்கினால் நடிப்பேன். ஏனெனில் நான் ஒரு மலையாளி... " 

வி.சி.குகநாதன்
நடிப்பின் உச்சத்தைத் தொட்ட சிவாஜி கணேசனும் கமல்ஹாசனும் தமிழ்த் திரையுலகினரே என்பதை இவர் அறிந்திருக்கவில்லையா என்ன? இதற்கு ஆர்யாவை வருத்தம் தெரிவிக்க வலியுறுத்தாத தென்னிந்திய நடிகர் சங்கமோ, ஒரு நிகழ்வில் அவரைப் பெயர் சொல்லாமல் குறிப்பிட்டுக் கண்டித்த தயாரிப்பாளர் வி. சி. குகநாதனுக்கு அறிவிக்கை அனுப்பியுள்ளதாம்.

ஆனாலும் மலையாளிகளைப் போலத் தெலுங்கர்கள் இப்படி நேரடியாகப் பேசிச் சிக்கிக் கொள்வதில்லை. பிற்காலப் பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பின் தமிழகத்தில் புகுந்து கோலோச்சிய நாயக்கராட்சி காலந்தொட்டு இன்று வரை அரசியல் - வணிக - நிலவுடைமை - ஆட்சியியல் அதிகாரம் பெரிதும் அவர்களது கையிலிருந்திருப்பதனாலேயோ?

இந்நிகழ்வுகள் தொடக்கக் காலம் முதற்கொண்டுத் தமிழ்த் திரையுலகில் இயங்கிய - இயங்குகிற பிற மொழியாளர்களைப் பட்டியலிட வைக்கின்றன. இந்த அளவிற்குத் தமிழர்கள் பிற மொழித் திரையுரலகில் காலூன்ற முடிகின்றதா என்ற கேள்வியும் எழுகிறது.

தெலுங்கினத்தவர்:

நடிகர்கள் எஸ்.வி.ரங்காராவ், எம்.ஆர்.ராதா, பாலையா, நாகையா, ராதாரவி, விஜயகாந்த், கே.பாக்கியராஜ், பானுச்சந்தர், சுதாகர், சின்னி ஜெயந்த், ரவிகிருஷ்ணா, தனுஷ், விஷால், ஜீவா, ரமேஷ், ஜெயம் ரவி, தருண், நடிகையர் சாவித்திரி, பி.கண்ணாம்பா, தேவிகா, ஜி.வரலட்சுமி, அஞ்சலிதேவி, விஜயநிர்மலா, ரோஜா ரமணி, ராதிகா, விஜயசாந்தி, ரோஜா, பானுப்ரியா, நிஷாந்தி, சில்க் ஸ்மிதா, மீனா, ரம்பா, அனுஷ்கா, பின்னணிப் பாடகர்கள் பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.பி.ஷைலஜா, பி.சுசீலா, எஸ்.ஜானகி, ஜிக்கி, தயாரிப்பாளர்கள் டி.ராமா நாயுடு, எல்.வி.பிரசாத், ஸ்ரீஹரி, ஏ.எம்.ரத்னம், தாசரி நாராயணராவ், அல்லு அரவிந்த், இயக்குநர்கள் கோடி ராமகிருஷ்ணா, கிருஷ்ணவம்சி, கஸ்தூரிராஜா மற்றும் தோட்டா தரணி,...

(தமிழிலும் நடித்துள்ள தெலுங்குப் பெருநடிகர்கள் இங்கு குறிப்பிடப்படவில்லை. தெலுங்கினத்தவர் இந்த அளவு விரவியிருப்பதால் இதர மொழி இனத்தவரைப் பகடி செய்து தமிழ்த் திரைப்படங்களில் பாத்திரங்கள் உருவாக்கப்படுவது போல் பெரும்பாலும் தெலுங்கினத்தவருக்கு நேர்வதில்லை.)

கன்னட இனத்தவர்:

இயக்குநர் ஸ்ரீதர், நடன இயக்குநர் சுந்தரம், நடிகர்கள் நாகேஷ், முரளி, அர்ஜுன், ரமேஷ் அரவிந்த், பிரகாஷ் ராஜ், பிரபு தேவா, வினய், ரஜினிகாந்த் (கன்னட மராட்டியர்), நடிகையர் பி.சரோஜாதேவி, ராஜஸ்ரீ, காஞ்சனா, ஐஸ்வர்யா ராய், சங்கீதா, ...

மலையாள இனத்தவர்:

இயக்குநர்கள் ஃபாசில், ஷாஜி கைலாஷ், நடிகர்கள் எம்.ஜி.ஆர்., எம்.என். நம்பியார், பிரதாப் போத்தன், பரத், ஷாம், ஆர்யா, பிருதிவிராஜ், கேப்டன் ராஜ், பாபு ஆன்டனி, நடிகையர் லலிதா, பத்மினி, ராகினி, அம்பிகா, ராதா, நதியா, அமலா, நயன்தாரா, அசின், காவ்யா மாதவன், பாவனா, மீரா ஜாஸ்மின், கோபிகா, கனிகா,...
(தமிழிலும் நடித்துள்ள மலையாளப் பெருநடிகர்கள் இங்கு குறிப்பிடப்படவில்லை.)

வட இந்தியர்:

குஷ்பூ, ஜோதிகா, சிம்ரன், நமீதா, சிரேயா, ஜெனிலியா,தமன்னா...

ஒரு நகைச்சுவை. நடப்பு தேதியில் தமிழ்த் திரையுலகில் கோலோச்சுபவரில் நகைச்சுவை நடிக-நடிகையர் மட்டிலும் அனைவரும் தமிழர்.

- யுவபாரதி