Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

February 13, 2015

முருக வழிபாடு - ஓர் உரையாடல்

https://www.facebook.com/ilango.krishnan.1/posts/850972431615102என்ற பதிவில் இளங்கோ கிருஷ்ணன் 'முருக வழிபாடு தமிழ் மதமா?' என்று தொடங்கிய உரையாடலில் பங்கேற்க முயல்கையில் என் பின்னூட்டம் நீளமாகும் எனத் தோன்றியது. எனவே தனியே பதிவிடுகிறேன்.)

1. அண்ணாதுரை சொன்னதாக இளங்கோ கிருஷ்ணன் சொல்லியிருப்பதை நான் இதற்கு முன் படித்ததில்லை. அப்படிக் கருத வாய்ப்பில்லை என்றும் சொல்லமுடியாது. அண்ணாவை முன்வைத்து தன்படங்களில் பாடும்-பேசும் எம்ஜிஆரின் பல்லாண்டு வாழ்க, நம் நாடு முதலிய பிரபல படங்களில் கையில் வேல் தாங்கிய முருகன் படம் இடம்பெறுவதைக் கவனித்திருக்கிறேன். ஒன்றே குலமென்று பாடுவோம்... என்ற பாடலைக் கவனித்தால் இந்த சொல்லாடல் முக்கியத்துவம் பெற்ற காரணம் தெரிகிறது.

2. குறிஞ்சி நில முருகன், பாலை நிலக் கொற்றவைச் சிறுவன். முல்லை நில மாயோன், பாலை நிலக் கொற்றவை சோதரன். குறிஞ்சி-முல்லை-பாலைக்குள்ள தொடர்பை நாமறிவோம். நிலவுடைமை வலுப்பெற்று பிற திணை வாழ்வுகளை மருத நில வாழ்வியல் உள்ளிழுக்கும் நிகழ்வும், சுடலையாண்டி கல்யாண சுந்தரனாகி உமாமகேசுவரனாகவும், சோமாஸ்கந்தனாகவும் ஆகி நிலைபெறும் நிகழ்வும், பேரரசு உருவாக்கமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. சிலப்பதிகார வேட்டுவ வரியிலேயே கலைமானின் மீதேற்றி வழிபடும் இளம்பெண் வழிபாட்டிற்கிடையிலேயும் கொற்றவையை சிவன் மனைவியாகவும், மாயன் சோதரியாகவும் போற்றும் மரபு தொடங்கிவிடுகிறது.

3. பற்பல திணை வாழ்வுகள் கலந்து மையப் பெருஞ் சமூக உருவாக்கம் நிகழ்கையில் அந்தந்த திணைமரபினர் உள்ளிழுக்கம் என்பது அந்தந்த தெய்வங்கள் அதற்கென ஒரு மதிப்புற்குடைய இடம் என்பதும் சேர்ந்தே நிகழ்ந்திருக்கிறது. திணைக் கடவுள்கள் பெருங்கடவுள்களுள் ஒருவராகின்றனர். ஆயினும் அவர்களுக்குரிய தனிப்பட்ட வழிபாடு-படையல்களில் பழம்பண்பு தெரிகிறதுதான். குறிப்பாக இன்றும் முருகனுக்குத் தேனும் திணைமாவும் முக்கியம்தான்.

4. கொற்றவை ஒரு சோதரனுக்கு சோதரியாகவும் (அதுவும் தங்கை) ஒரு கணவனுக்கு மனைவியாகவும் ஒரு மகனுக்குத் தாயாகவும் ஆக்கப்பட்டு மையப் பெருஞ் சமூக உருவாக்கத்திற்குள் உள்ளிழுக்கப்படுவதும், பெண் தலைமை மறைந்து ஓர் ஆண் மையமாகவே சோதரன்-கணவன்-மகன் என ஏதோவொரு வகையில் ஆணோடு சேர்த்தே அடையாளம் காணப்படும் நிலையும், திணைச் சமூகம் - பெருஞ்சமூகம், அடையாள நிலம் - உடைமை நிலம் இம்மாற்றங்களோடு பெருந் தொடர்புடையது.

5. இளங்கோ கிருஷ்ணன் குறிப்பிடுவது போல், 'இன்றிருக்கும் முருகன் கோவில்கள் - உரையாடல்கள் எல்லாம் அதிக பட்சம் ஒரு நானூறு வருட வரலாறு உடையவை' என்பது ஏற்புடையதல்ல. பத்துப்பாட்டில் ஒன்றான திருமுருகாற்றுப்படையிலேயே அறுபடைவீடுகள் - அங்கு கோயில் கொண்டுள்ள முருகன்கள் உண்டு. ஆகவே அறுபடை வீடுகளுக்கு குறைந்தபட்சம் ஒன்றரை ஆயிரம் வருட வரலாறு உண்டு. முருகன் போர்த் தெய்வம். படைவீடு என்பதற்கு போர் நிமித்தம் தற்காலிகமாகப் படைதங்கும் இடம் எனத் தனித்துச் சொல்லவேண்டியதில்லை. இன்றிருக்கும் பல கோயில்கள் 500 ஆண்டுகளுக்கு முன்பே பேர் பெற்றவை என்பதற்கு அருணகிரிநாதரின் திருப்புகழே சாட்சி.

6. சைவத்தால் எவ்வளவு உள்ளிழுக்கப்பட்டாலும் முருக வழிபாடும் சரி, சக்தி வழிபாடும் சரி, தனித்தும் வலுவாக இயங்கின என்பதால்தான் ஆறுமதங்களில் சைவம் மட்டுமின்றி, கௌமாரமும் சாக்தமும் தனித்துக் கூறப்படுகின்றன. (வைணவம் ஈர்த்துக் கொண்ட சக்தி வழிபாட்டின் கூற்றுக்கும், சைவம் ஈர்த்துக் கொண்ட சக்தி வழிபாட்டின் கூற்றுக்கும் உள்ள பெரும் வேறுபாடு குறித்து நிறைய பேசலாம். முருக வழிபாடு குறித்த இக்குறிப்பில் வேண்டியதில்லை).

7. தமிழைத் தாய்மொழி-ஆட்சிமொழி-இலக்கியமொழியாகக் கொண்ட சோழ - பாண்டியப் பேரரசுகள் அடுத்தடுத்த இரு நூற்றாண்டுகளில் வலுவிழந்து வீழ்ந்து, தெலுங்கைத் தாய்மொழி - ஆட்சி மொழி -இலக்கிய மொழியாகக் கொண்ட விஜயநகரப் பேரரசு தமிழகத்தில் வேரூன்றி நிலைபெற்றதற்கும், அந்த 14-ஆம் நூற்றாண்டுக்குப் பின், முருக வழிபாடு தமிழ் - தமிழ்க்கடவுள் என்ற அடையாளத்தோடு படிப்படியாக வேகம் கொண்டு எழுந்ததற்கும், ஆள்வோர் - ஆளப்படுவோர் என்ற முரணின் ஒரு குறியீடாக முருகன் இருந்திருக்கிறான் என்பதற்கும் வரலாறு - மொழி - அடையாள ரீதியாக நெருங்கிய தொடர்புண்டு. முருகன் தமிழ்ப் பெருங் கடவுளானான்.

8. மேலும், விஜயநகரப் பேரரசு, அதன் கிளைகளான நாயக்க மன்னர்கள் சைவம் - வைணவம் இரண்டையும் ஆதரித்தனர் என்றாலும் வைணவமே அவர்கள் சார்ந்த சமயம். திருமாலானவன் பெருமாள் எனும் பெரியவனாயும் கண்ணன் எனும் சிறுவனாகவும் இருப்பவன். சைவர்களின் சிவன் பெரியவன் மட்டுமே என்பதால் கண்ணனுக்கு இணையாக சிறுவனாகவுமுள்ள முருகனைச் சைவர்களும் அறுமுகச் சிவன் என்றனர். ஆட்சியிழந்த சைவம் தம் தரப்பில் அதிக நூல்களை எழுதியதும் அக்காலத்தில்தான். முருகன் குமரனாக மட்டுமின்றி சைவப் பெருங் கடவுளாகவும் நிலைபெற்றான்.
9. எல்லாப் பெருங்கடவுளருக்கும் தமிழில் போற்றிப் பனுவல்கள் உண்டு. ஆனால் மற்றவர்களை ஒப்பிடுகையில் மந்திரப் பனுவல்கள் தமிழில் முருகனுக்கே அதிகம். சித்தர் பாடல்களின் பேசு பொருள் சார்ந்து பரிச்சயமும், ஈடுபாடும் கொண்டவர்கள் முருகன் – தமிழ் தொடர்பை இன்னும் நெருக்கமாக உணர்வர்.

February 13, 2014

தமிழுக்கு அழிவில்லை

தமிழுக்கு அழிவில்லை. இன்று தமிழர்களை நம்பி மட்டும் தமிழ் இல்லை. தமிழை வைத்துத்தான் தமிழர்கள் அடையாளம் பெற்று வருகிறார்கள். 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்சொல், திசைச்சொல், திரிசொல், வடசொல் என இலக்கணம் பெற்று, எவ்வெவற்றை எப்படி தன்வயப்படுத்தவேண்டும் என்று வகைமுறை வகுக்கப்பெற்றது தமிழ். பேரிலக்கியங்கள் கண்டு திளைத்த மொழி. 

பதினாலாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரை தன்னைத் தம் தாய்மொழியாகக் கொள்ளாத பெரும் ஆட்சியாளர்கள் காலத்திலும் - திசை மொழிகள் பேரிலக்கியங்கள் கண்ட அக்காலத்திலும் -அக்காலத்திற்கேற்ப சிற்றிலக்கியங்கள் வழி தன்னைத் தொடர்ந்து இலக்கிய மொழியாகவும் தகவமைத்துக் கொண்டே வந்திருக்கிறது தமிழ்.

இன்றைய காலத்திற்கேற்ப இணையத்திலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. எவ்வெக்காலத்திலும் அவ்வக்காலத்திற்கேற்ப பிறமொழிச் சொற்களையும் வெறுப்பற்று உள்வாங்கி, தன்வயப்படுத்தி தொடர்ந்து பேச்சு மொழியாகவும் இருந்து வந்திருக்கிறது; இருக்கிறது.

ஒரு பக்கம் தன்பேரைச் சொல்லித் தன்மைய அரசியல் செய்யவும், மறுபக்கம் தன்பேரை எதிர்த்துத் தன்மறப்பு அரசியல் செய்யவும், இன்னொரு பக்கம் திட்டமிட்டோ/திட்டமிடாமலோ தன்பேரைச் சொல்லியோ/சொல்லாமலோ ஒரு அரசியல் செய்யவும், வேறொரு பக்கம் தான் வெறும் தொடர்பு சாதனம்தான் என்று சொல்லி வேறொரு அரசியல் செய்யவும் தொடர்ந்து இடம்தந்து இன்றும் வாழ்கிறது.

தமிழர்களுக்குத் தமிழைத் தெரியாவிடினும், தமிழுக்குத் தமிழர்களைத் தெரியாதா என்ன? தமிழ் தமிழ்தான்.


- யுவபாரதி

December 11, 2012

இது நடிகர்களின் நாடு - தம்பி! நான் ஏது செய்வேனடா?

காலை வீட்டை விட்டு வெளியே வந்ததும் தெரிந்தது. நகரம் என்றுதான் இல்லை. புறநகர்ப் பகுதிகளிலும் ஆங்காங்கே பேனர்கள், கட்அவுட்டுகள், சுவரொட்டிகள்... நாளை நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளாம். உடனே பல நண்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்பினேன். 'இன்று சி.சுப்பிரமணிய பாரதி என்ற ஒரு கவிஞனின் 130-ஆவது பிறந்தநாள் - அவனை நினைப்போம்' என்று.

சில பத்திரிகைகளில் ஓரிரு பத்திகள். ஓரிரு புகைப்படங்கள். அமைச்சர்களும், சில அமைப்பினரும், வயதான கொஞ்சம் தியாகிகளும் கடற்கரையிலுள்ள பாரதி சிலையைச் சுத்தம் செய்து மாலை சூட்டி சில புகைப்படங்கள். சில பள்ளிகளில் பாட்டு, பேச்சு, கட்டுரை என சில போட்டிகள் நடத்தப்பட வாய்ப்பு. அவ்வளவுதான் பாரதியின் நினைவு.

அதே பத்திரிகைகளில் நாளை ரஜினியின் பிறந்தநாள் என்பதால் இன்றே அது குறித்த சில விளம்பரங்கள். சிறப்பு மலர் கூட வெளியிடுகின்றனவாம் சில இதழ்கள். நாளை இன்னும் தூள்பறக்கும். பல பக்க விளம்பரங்கள், சிறப்புப் பக்கங்கள், விதவிதமான புகைப்படங்கள் என்று இதழ்கள் குலுங்கும். தெருவெங்கும் "சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு..." என்று ஒலிபெருக்கிகள் அலறும். ஆங்காங்கே 'அவரவர் செலவில்' அன்னதானம் நடக்கும். அலகு குத்து நிகழும்.  பால் காவடி, பழக் காவடி, புஷ்பக் காவடி, மயில் காவடி, மச்சக் காவடி, தீர்த்தக் காவடி என்று முருகன் கோவில்கள் முழி பிதுங்கும். தீச்சட்டி, தீமிதிகளால் அம்மன் கோவில்கள் அமர்க்களப்படும். விசேஷ அர்ச்சனை, அபிஷேகங்கள் என்று இன்ன பிற கோவில்கள் திக்குமுக்காடும்.

இது நடிகர்களின் நாடு. அதனால்தான் நடிகர்கள் வெற்றிபெறும் இந்நாட்டில், உண்மையில் ஊருக்கு உழைப்பவர்கள் வெற்றி பெறுவதில்லை. அப்படியே தப்பித்தவறி ஊருக்கு உழைப்பவன் வெற்றிபெற்று விட்டாலும், சூழல் கருதி அவனும் நடிகனாகிவிடுகிறான். அப்படி ஆனால்தான் அவன் முழுமை பெற்றவனாகவும் நம்பப்படுகிறான். கிளிசரின் தடவாமலேயே - அல்லது வெளியில் தெரியாமல் தடவி - நினைத்த மாத்திரத்தில் குலுங்கிக் குலுகி அழுதல், குத்து வசனம் (பஞ்ச் டயலாக்) பேசுவது போல் அலறிக் கத்துதல் என்று அரசியல்வாதிகளும் நடிகர்களாகிவிடுகிறார்கள். ஒரே பாட்டில் பணக்காரனாகி விடுபவன்தான் இங்கு பெரிய நடிகன் என்பது போல், நம்மை ஒரே பேச்சில் கனவுச் சமுதாயத்தில் நிலைநிறுத்துவதாக நடிப்பவன்தான் இங்கு பெரிய அரசியல்வாதி. தன் நாட்டையும் சமுதாயத்தையும் விட, தத்தம் வீடும் குடும்பமுமே முக்கியம் என்று இருப்பவர்களையே ஆதர்சமாகக் கொண்டு வாழ்கிற நடிகர்களின் நாடு இது. தன் வீட்டையும் குடும்பத்தையும் விட நாடும் சமுதாயமும் முக்கியமென்று வாழ்ந்த பாரதி போன்றவர்களுக்கு இங்குஏது இடம்?

சமுதாயம் என்ற சொல்லே பிறப்பு வழிச் சாதி என்பதாகத் தமிழில் பொருள்கொள்ளப்பட்டு ரொம்ப நாளாயிற்று. அதுவும் சாதி ரீதியாகத் தமிழர்களைத் திரட்டி முண்டா தட்ட வைப்பவர்கள் எழுச்சி பெற முயலும் இக்காலத்தில், "விதியே! விதியே! தமிழச் சாதியை என் செயக் கருதி இருக்கின்றாயடா?" என்று - தமிழச் சாதி என்று - பாடிய அந்த முண்டாசுக் கவிஞனை நினைக்காமல் இருக்கமுடியவில்லை.

"தம்பி! நான் ஏது செய்வேனடா? தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாகயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது..."

- என்று பரலி சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்தில் எழுதினான் பாரதி.

இனி, பாரதியை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 11-இலேனும் பலருக்கும் நினைவு கொள்ளச் செய்ய ஒரே ஒரு வழி இருக்கிறது.

ரஜினிகாந்த்தின் பிறந்தநாளுக்கு முந்தைய நாள்தான் பாரதியின் பிறந்தநாள் என்று பலரிடமும் சொல்லிவைப்பதுதான் அது!


- யுவபாரதி