Showing posts with label வைகோ. Show all posts
Showing posts with label வைகோ. Show all posts

March 26, 2013

அதுவும் உண்ணாவிரதம்... இதுவும் உண்ணாவிரதம்...


காலை 9 மணிக்கு இருவர் கைப்பிடிக்க நடந்து வருகிறார். உறுதியாக நின்று உண்ணாவிரதப் பந்தல் முகப்பில் வைக்கப்பட்டிருந்த பாலச்சந்திரன் படத்திற்கு மாலை அணிவிக்கிறார். பின் தமக்கென ஒதுக்கப்பட்ட ஒரு பிளாஸ்டிக் இருக்கையில் அமர்கிறார். அவர் 92 வயதான ஒரு மூதாட்டி. மாலை 5 மணி வரை இடம் விட்டு கொஞ்சமும் எழாமல் உண்ணாவிரதம் இருக்கிறார். பெயர் மாரியம்மாள். ஊர் நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டி. வைகோவின் தாயார். 

இந்தச் செய்தியை வாசிக்கும் போதே இன்னொன்று நினைவுக்கு வருகிறது. 86 வயது முதியவர் அவர். சென்னை கடற்கரை அண்ணா சமாதியருகில். அல்லது சமாதியாகி விட்ட அண்ணா அருகில். உயர்தர படுக்கை. சுற்றிலும் ஏர்கூலர்கள். பெரிய மின்விசிறிகள். தலைமாட்டிலும் கால்மாட்டிலுமாக வாழ்க்கைத் துணைகள். சுற்றிலும் பிள்ளைகள், பேரன்கள், கட்சி முக்கியஸ்தர்கள். சுமார் நான்கு மணி நேரம் இருந்துவிட்டு, வெற்றி வெற்றி என ஒரு பிரசங்கம். 

நம்மூரில் அதுவும் உண்ணாவிரதம்... இதுவும் உண்ணாவிரதம்...

December 17, 2011

முல்லைப் பெரியாறு அணை : ஒரு விளக்கம் - ஒலிப்பதிவு / டிசம்பர் 21 பொருளாதார முற்றுகைப் போராட்டம்

17.12.2011 அன்று காலை சென்னை எழும்பூர் இம்பீரியல் ஹோட்டல் சிராஜ் மகாலில் "முல்லைப் பெரியாறு அணை : ஒரு விளக்கம்" எனும் தலைப்பில் விளக்கக் கூட்டம் நடைபெற்றது. மறுமலர்ச்சி இணையதள நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல் குறித்த தமிழ் நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கத்தினர் எடுத்த " முல்லைப் பெரியாறு அணை - பிரச்சினையும் தீர்வும்" என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. அவ்வாவணப்படத்தின் குறுந்தகடுகள் பத்திரிகையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டன.

முல்லைப் பெரியாறு அணை வரலாற்றைத் தெளிவாக தொழில் நுட்ப நோக்கில் விளக்கும் இப்படத்தின் குறுந்தகடுகளை பற்பல படிகள் எடுத்து தமிழர் அனைவருக்கும் விநியோகிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்விற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கிப் பேசினார். மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார்.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை அடுத்து கேரளத்தில் மலையாளிகளால் தமிழர்கள் தாக்கப்படுவதற்குக் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அங்கு நம்மவர் தாக்கப்படுகின்றனர்,     உடைமைகள் சூறையாடப்படுகின்றன என்பதற்காக, உணர்வெழுச்சியில், இங்கு வாழும் மலையாளிகளின் கடைகள், வணிக நிறுவனங்களின் மீது நம் இளைஞர்கள் எவரும் பதில் தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், அது நம் பண்பாடு இல்லை என்றும் இருவரும் கேட்டுக்கொண்டனர்.

கேரள அரசுக்கும், கேரளத்தவருக்கும் நமது உணர்வையும், உரிமையையும் வெளிக்காட்டும் விதமாக, வரும் டிசம்பர் 21 அன்று, தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும் 13 சாலைகளிலும் அறவழியில் மறியலில் ஈடுபட்டு, பொருளாதார முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என அறிவித்தனர். அதில் யாதொரு கட்சிச் சின்னங்களும், கொடிகளும் இல்லாமல் தமிழர் அனைவரும் ஒன்றுபட்டுப் போராடவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

அந்நிகழ்வின் ஒலிப்பதிவு இது.

mp3 வடிவில்...

முல்லைப் பெரியாறு அணை - ஆவணப்படம் 


பழ.நெடுமாறன் உரை :


வைகோ உரை :



ஒலிப்பதிவு - யுவபாரதி