Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

April 26, 2016

மரக்கிளையும் பற்றுக்கோலும்



* அரசு என்பது மக்களின் சமூக வாழ்க்கையை ஒழுங்குபடுத்தி மேலாண்மை செய்யவும் பாதுகாக்கவுமான நிறுவனம். சமூக நிறுவனங்களுக்குள் அதுவே அதிகாரம் மிக்கது.

* ஒரு அரசாங்கத்தின் ஆகச்சிறந்த பரிமாணம் என்பது அதன் மக்கள் பெற்றுள்ள அரசியல் விழிப்புணர்வே.

* அரசியல் என்பதே நலன்கள், மோதல்கள், அதிகாரம் என்ற மூன்றோடும் தொடர்புடையது.

மேற்கண்ட குறிப்புகளில் அரசு-அரசாங்கம்-அரசியல் என்ற சொற்களுக்குப் பதிலாக சாதி என்ற சொல்லைப் பொருத்திப் பார்த்தால் மிகவும் பொருந்தும்.

இந்நாட்டில்/மாநிலத்தில் ஒவ்வொரு முறையும் ஆளவிருக்கும் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையான தேர்தலில் சாதி முக்கியப் பங்கு வகிக்கிறது; பெரும்பாலான மக்கள் தாங்கள் சாதி பார்த்து வாக்களிப்பதில்லை என்றே சொல்லிக் கொண்டாலும், அவ்வத் தொகுதிகளில் ஆதிக்கம் பெற்ற பெரும்பான்மைச் சாதியைச் சார்ந்தவர்களே பெரும்பாலும் வேட்பாளர்களாகிறார்கள்; அக்கறை கொண்டு விமரிசிப்பதை விடவும், மக்களை விமர்சிக்காமல் அவர்களுக்குப் பிடித்தமானவர்களாகக் காட்டிக்கொள்ளவே அனைவரும் பெரிதும் முயல்கிறார்கள். ஏன்?

உண்மையில் சனநாயகம் வேர்கொண்டிருப்பது அரசாங்கம் எனும் நிறுவனத்தில் இல்லை. பரஸ்பர சமூக உறவுகளில்தான் இருக்கிறது. சமூக உறவு என்கிறபோதே அதில் முக்கியப்பங்கு வகிப்பது சாதி. அதனால்தான் சட்டரீதியாக சனநாயகத்தை ஏற்படுத்தினாலும் முழுமையாக நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு அது சவாலாயிருக்கிறது. சுதந்திரம் இருக்கிறதுதான். அதன் பொருளார்ந்த தன்மையில் குடிமக்கள் எல்லார்க்கும் ஒத்த அளவில் இல்லாததால் பல தருணங்களில் சமத்துவத்திற்கு எதிராகவே இருக்கிறது. பிறகு, சகோதரத்துவம் பற்றிப் பேச என்ன இருக்கிறது 

பெருநகரம் சார்ந்த சமூக உறவுகளில் சாதி பெரிதும் வெளிப்படாதிருக்கிறது. நகரமயமாதல் வகிக்கும் முன்னோக்குப் பாத்திரம்தான் இது. அதுவும் அவசரமாய்க் கடந்து போகும் பயண அளவில்தான். இருந்து வாழ்வதில் இல்லை. உடன் படிக்கும் / பணியாற்றும் ஒரு தனிமனிதரை அடையாளம் காண்கையில், எத்தனைத் தகவல்கள் தெரிந்தாலும், சாதி தெரிந்தால்தான் ஒருவர் குறித்து அனைத்தும் அறிந்தவராக திருப்தி கொள்ளும் சமூக மனம்தான் இயங்குகிறது. சிறுநகரம் மற்றும் கிராம அளவில் இந்த சமூக மனத்தின் வலிமை அதிகம் எனச் சொல்லவேண்டியதில்லை.

கடந்த பதினைந்து வருடங்களில், வெகுமக்கள் புழங்கு தளத்திலும் தத்தம் சாதி குறித்துப் பேசுவது அதிகரித்திருக்கிறது. ஒப்பீட்டளவில் வட்டார அளவிலான சிறுபான்மைச் சாதியினரிடம் சாதியை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாத தன்மை இருக்கிறது. அது வாய்ப்பு கிடைக்காத அளவிலான எண்ணிக்கை சார்ந்த கூச்சம் எனலாம். ஆனால், வட்டார அளவிலான எண்ணிக்கைப் பெரும்பான்மைச் சாதியினரிடத்தில் - வயது வித்தியாசம் கடந்து - அந்தக் கூச்சமும் இல்லை; அவசியப்படவுமில்லை. போட்டிக்கு வர இயலாத அளவிலான சிறுபான்மைச் சாதியினருடன் இணக்கமான உறவையே பூண முயலும் பெரும்பான்மைச் சாதியினர் பலரின் சாதாரண உரையாடலிலும், தலித் சமூகத்தவர் சிலர் வகிக்கும் உயர்பதவி, அதற்காதாரமான வளர்ச்சி மற்றும் பல பிரச்சனைகளுக்கும் இவர்களே காரணம் என்பதாகச் சொல்கிற அதிருப்தியைக் காணமுடியும். உடன் நிற்பவர்களில் தலித் சமூகத்தவர் இருப்பது தெரிந்தாலும் இயல்பாக இப்படிச் சொல்லமுடிகிறது என்பதுதான் நடப்பியல்.

படித்தவர்கள் நடுவிலேயே இப்படிச் செயல்படும் சமூக மனம் வெகுமக்கள் நடுவில் எப்படியெல்லாம் செயல்படும் என்பதற்கு, ஆங்காங்கே வெளித்தெரிந்த அளவிலான ஊர்விலக்கங்களும் ஆணவக் கொலைகளும் சாட்சியாக இருக்கின்றன. பொதுப்புத்தி என்ற பெயரில் பொதுச் சமூகம் என்பதாய்க் குறிப்பிடப்படும் வெகுமக்களிடம் இச்சிந்தனை நிலை பெற்று நிற்பதால், இது இயல்பான நம்பிக்கையாகவும் நிலைபெற்றுவிடுகிறது. எண்ணிக்கைப் பெரும்பான்மை சார்ந்த அரசியல் நடைமுறையில் என்பதால் வெகுமக்களை விமரிசித்தல் எனும் அபாயத்தை ஆட்சியாளர்கள் அணுகுவதில்லை.

கற்றோர் விழுக்காடு அதிகரித்து வருகிறதுதான் என்றாலும், சாதி மீதான விமர்சனத்தை எண்ணும் எழுத்துமாக மட்டுமே இருக்கிற கல்வி செய்வதில்லை. அது முற்றிலும் அன்னியப்பட்டிருக்கிறது. உண்மையான சமூக நடத்தையைக் கல்வி கற்பிக்காத இடத்தில், சாதி தனக்காகச் செய்து கொள்வதே சமூக நடத்தையாகிறது. அரசியல் நடத்தையும் அதிலிருந்தே கிளைக்கிறது. கல்வியை வரையறுக்க வேண்டிய இடத்திலுள்ள அரசு என்பது அரசியல் கட்சிகளுக்கிடையிலான தேர்தல் போட்டிகளில் வென்று ஆட்சியமைக்கும் அரசாங்கத்தால் அதிகாரம் பெறுகிறது.

நடப்பியல் சார்ந்து விவாதிக்கும் கல்வி, அரசியல் விழிப்புணர்வு மிக்க குடிமக்களை உருவாக்கும் வாய்ப்புள்ளதாகையால், ஆட்சியாளர்களின் தன்னிச்சையான நடவடிக்கைகளைத் தர்க்கப்பூர்வமாக தவிர்க்கத்தக்க தடை மிகுந்துவிடும் அபாயமும் உள்ளது. அதிகாரத்திற்கு ஆபத்தின்றி, உணர்வு ரீதியாகத் திரட்டிக்கொள்ள காலகாலமாக கிளைபரப்பி நிற்கிற சாதியைப் பற்றுக் கோலாகக் கொள்வதே எளியதும் வலியதுமாக ஆட்சியாளர்களுக்கு ஆகிவிடுகிறது. எண்ணிக்கைப் பெரும்பான்மையும் சமூக ஆதிக்கமும் கொண்ட சாதிகளைச் சார்ந்தவர்களால் அரசியல் அதிகாரம் எளிதில் கிடைக்கிறது என்பதால் அவர்களே அதிக அளவில் வேட்பாளர்களாகக் களமிறங்கி சமூக அதிகாரத்தோடு அரசியல் அதிகாரமும் பெறுகிறார்கள்.

ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு அவரது சாதி தோலாகவும், தொகுதி சட்டையாகவும் ஆகிவிடுகிறது என்று அம்பேத்கர் ஒரு கட்டுரையில் சொன்னது போல அவர்களும் ஆகிவிடுகிறார்கள்.

March 16, 2016

சாதி வன்கொலையும் சமூக ஒப்புகையும்


சுவரில் ஒட்டப்பட்ட படத்தில் தலை குனிந்தவாறே கைராட்டையில் நூற்றுக் கொண்டிருக்கிறார் காந்தி. சுதந்திரம் கிடைத்த கையோடு அவரைக் கொன்றாகிவிட்டது. சுவரில் அகழ்ந்த அலமாரியில் சாய்ந்திருக்கும் நூல்களில் உறைந்து நிற்கிறார் அம்பேத்கர். பல நூறாண்டு காலத்துக்கான உழைப்பை ஒரு பத்தாண்டுக்குள் செய்து முடித்த பெரும் களைப்பால் மத்திம வயதிலேயே காலமாகியும்விட்டார். காலண்டரின் கிழிக்கப்படாத இரு நாள் தாள்களைப் பறக்கவைத்துக் காட்டுகிறது காற்றாடி.

***

பட்டப்பகலில், மக்கள் நெருக்கம் மிக்க ஒரு சாலையில், சாலையைக் கடக்கக் காத்திருக்கும் இரு பிள்ளைகளை, துள்ளத் துடிக்கப் பலவெட்டுகள் வெட்டிவிட்டு, எந்தத் தடையுமின்றி நிதானமாகத் தங்கள் வாகனத்தை ஓட்டிச் செல்லும் மனிதர்களைக் காட்டும் காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்ததும், பேசமுடியாத பதற்றம் ஏன் என்னைத் தொற்றிக் கொண்டது? பதைபதைத்து ஓடி அருகில் சென்ற ஒருவரைத் தவிர, சுற்றி நின்றோர் எல்லாரும், ஏதோ திரைப்படங்களில் பார்த்துப் பழகிய காட்சி நேரில் நடப்பதைப் பார்ப்பது போலச் நிதானமாகப் பார்க்க என்ன காரணம்? அந்தக் கணத்தில் சாலையைக் கடந்து கொண்டிருந்த வாகனங்களில் இருந்த வாகன ஓட்டிகள் சற்று நேரம் வாகனத்தை நிறுத்தி, அக்காட்சியைப் பார்த்துவிட்டு, பிறகு அப்படியே கடந்து செல்வது ஏன்?

இப்படி ஒன்று நடந்ததே தெரியாது என்று சொன்ன சிலரிடம், நேற்று இந்தப் கொடூரத்தைப் பகிர்ந்து கொண்டபோது, ஐவரில் ஒருவர்தான் பதறுகிறார். பெரும் குற்றம் என்கிறார். ஒருவர் இப்படி நடக்குறது சகஜம்தான் சார் என்கிறார். மூவரிடம் எந்தச் சலனமோ வெளிப்பாடோ இல்லை. சமூகம் பெரிது. பெரிஞ்சமூகம் இப்படித்தான் இருக்கிறது. பதறுகிறவர்கள்தான் தனிமைப்படுகிறார்கள். அதனால்தான் அந்தக் கொலையாளிகள் எந்தத் தடையுமின்றி நிதானமாகத் தங்கள் வாகனத்தை ஓட்டிச் செல்கிறார்கள்.

அரிவாள் தூக்கும் வன்முறையை நாயகத் தன்மையோடு காட்சிப்படுத்துவதில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் திரைப்படங்கள் செலுத்தும் தாக்கத்தின் பங்கை, அவை ஒரு பார்வையாளராக ஒவ்வொருவரையும் செயலற்றுப் பார்க்கப்பழக்கிய விதத்தைக் குறைத்து மதிப்பிடமுடியாது. அரசியல் கட்சிகள் பலவும் ஏறக்குறைய இதே பண்பு கொண்டவையாகவே வெகுமக்கள் மனதில்  ஆழப்பதிந்திருக்கின்றன. தற்காத்துக் கொள்வதாக நம்புவதில் முன்னிற்கும் அஞ்சும் தற்பண்பு (பயந்த சுபாவம்) எதிர்மறையாக உருவாக்கப்படுகிறது. அரசியல் பண்பு என்பதும் தகர்ந்து கொண்டு இருக்கிறது. மாற்றுத்தரப்பில், உடனடியாக எதிர்வினை செய்கின்றனர் என்பதற்காக சமூக வலைத்தளங்களில் இயங்குவோர் மத்தியிலும் அரசியல் பண்பு மிகுந்திருப்பதாக நம்பமுடியவில்லை. எத்தனை பெரிய சிக்கலாக இருந்தாலும், காட்சி மற்றும் செய்தி ஊடகங்களைப் போல, நான்கு நாட்கள் அல்லது அதிகம் சென்றால் ஒரு வாரத்திற்கு மேல் அச்சிக்கல் பற்றிய சிந்தனைகள் காலாவதியாகி விடுகின்றன.

யார் இன்னார் என்று தெரியாத ஒரு நகரத்தில் பலர் முன்னிலையில் நடைபெற்ற ஒரு கொடூரத்தைச் சலனமின்றி பலரும் பார்க்கிறார்கள் என்பதை மட்டும் கணக்கில் கொண்டே கூட, வெகுமக்கள் மனநிலையை இப்படியே புரிந்து கொள்ளமுடிகிறது.

***

கொல்லப்பட்டவர் யார்? கொன்றவர் யார்? காரணம் என்ன? என்பது தெரிய வரத் தொடங்கியதும் மக்களின் மௌனம் அடியாழத்துக்குச் சென்றுவிடுகிறது. வெகுமக்கள் செல்வாக்கு பெற்ற பெரிய கட்சிகளும் அதே மனநிலையைக் கடைபிடிக்கின்றன. தேர்தல் நெருங்கும் வேளை என்பதால் மட்டுமல்ல. சற்று பின்னோக்கி கவனித்தால் பெரும்பாலும் அவை இப்படித்தான் இருக்கின்றன. சாதி ஆணவக் கொலைகளை மறுக்கவோ அல்லது யாருக்கும் வலிக்காத அளவுக்கு கிளிசரின் கண்ணீர் வடிக்கவோ அல்லது பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நிதி நிவாரணம் அளித்து அமைதியுறச் செய்யவோ மட்டும் செய்கின்றன. ஜனநாயகத்தில் மதப்பெரும்பான்மை வாதம் வலுப்பெறுவதை எதிர்க்கும் பலரும் சாதிப்பெரும்பான்மை வாதம் வலுப்பெறுவதைக் கண்டும் காணாமல் நகர்கிறார்கள். எண்ணிக்கைப் பெரும்பான்மை என்பது மட்டுமே அதிகாரத் தரப்புகளுக்கு முக்கியமான தேவையாகி விடுகிறது.

கடந்த இருபதாண்டுகளில் சாதி ரீதியான திரட்சி வெகு வேகமாகவும் விமரிசையாகவும் நடந்து வருகிறது. எண்ணிக்கைப் பெரும்பான்மைச் சாதிகளைப் பார்த்து, அரசியல் கட்சிகள் அவற்றுக்குத் தரும் முக்கியத்துவத்தைப் பார்த்து, சொற்ப எண்ணிக்கையுள்ள சாதிகள் கூட அமைப்புகளாகத் திரண்டு வருகின்றன.

வடக்கே தலித் சாதித் தம்பியும் வன்னியர் சாதிப் பெண்ணும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதை எதிர்த்து ஊர் கொளுத்தப்படுகிறது. பதைபதைத்துச் சில வாரங்கள் அது பற்றி விவாதிக்கப்படுகிறது. கவனப்பாடுகள் அடங்கிய சில மாதங்களில் இளவரசன் உயிரற்ற உடல் இரயில் தடத்தில் கண்டுபிடிக்கப்படுகிறது. அடுத்து அந்தப் பகுதியில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சக்தி எது?

தலித் சாதித் தம்பியும் கவுண்டர் சாதிப் பெண்ணும் கோயிலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். அந்தத் தம்பியைக் கவுண்டர் சாதி அமைப்பு ஒன்று அடித்து இழுத்துச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. மறுநாள் தலையற்ற கோகுல்ராஜின் உடல் இரயில் தடத்தில் கண்டுபிடிக்கப்படுகிறது. தேடப்பட்டுவந்த சாதி அமைப்பின் தலைவர் எப்பேர்ப்பட்ட அளவில் தலை தூக்கிக் கொண்டாடப்பட்டவாறு சரணடைகிறார்?

சாதி என்ற வகையிலும் பாலினம் என்ற வகையிலும் ஒவ்வொருவரும் அமைப்புக்குள்ளேயே அவரவர் இடத்தில் பொதிந்திருப்பதால் அமைப்பு வன்முறை கண்ணுக்குத் தெரிவதில்லை. திவ்யாவோ சுகன்யாவோ கௌசல்யாவோ, சாதியைக் காப்பாற்ற கடமைப்பட்டவர் என்ற வகையில் பெண்ணின் தரப்பும் தேர்வும் பொருட்படுத்தப்படுவதுமில்லை. இது தனியே ஆராயத் தக்கது. வெளித்தெரியாத அமைப்பு வன்முறை ஊர் ஊருக்கு வெவ்வேறு வகையில் கலாச்சார வன்முறையாக வெளிப்படும்போது ஓரளவு கண்ணுக்குத் தெரிகிறது. சட்டம் இவை எதையும் ஏற்றுக் கொள்ளவில்லை எனினும், அரசோ நீதித்துறையோ அரசியல் கட்சிகளோ பிரச்சார இயக்கங்களோ இதைக் களையச் செய்யவேண்டியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்காத போக்கினால் நேரடி வன்முறை நடந்தேறுகிறது.

தருமபுரி > திருச்செங்கோடு > உடுமலை என்ற காலவரிசைப்படியான இந்த வன்முறை வெளிப்பாடுகளின் வடிவ மாற்றத்தில், அந்தந்தப் பகுதி பெரும்பான்மைச் சாதிகளின் குணங்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ள பண்புகளுக்கும் பெரும்பங்குள்ளது. இக்கட்டமைவை அந்தந்த சாதி அமைப்புகளின் தலைவர்களும் வரலாற்றுப் புனைவாளர்களும் அதிகார நோக்கத்திற்காக நேரடியாகவும், திரைப்படக் கர்த்தாக்கள் வணிக நோக்கத்திற்காக மறைமுகமாகவும் செய்து வருகின்றனர்.

வடக்கிலும் மேற்கிலும் மறைவாகச் செய்யப்பட்ட வன்முறை தெற்கே நகர மத்தியில் பலர் பார்க்க நடந்தேறுகிறது. தலித் சாதித் தம்பியும் தேவர் சாதிப் பெண்ணும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டு வாழ்கின்றனர். அது முதலான அச்சுறுத்தலை, பிறகு பெண் வீட்டாரால் கடத்தப்பட்ட பெண் காவல் துறையின் துணையோடு மீட்கப்படுகிறார். தம்பதியர் சேர்ந்து வாழ்ந்துவருகிறார்கள். பல்பொருள் அங்காடிக்குச் சென்று திரும்பி சாலை கடக்கையில் இருவரும் சரமாரியாக வெட்டிச் சாய்க்கப்படுகிறார்கள். பலர் பார்க்கச் செய்யப்பட்ட இந்தக் கொடூர வன்முறையின் இலக்கு என்பது, எங்கள் சாதிப் பெண் சாதி மறுப்புத் திருமணம் செய்தால், பலர் பார்க்க நேரடியான வன்முறையிலேயே இறங்குவோம் என்ற அச்சுறுத்தலை அனைவரிடமும் விதைக்கச் செய்தே. அதைப் பதற்றமின்றிச் செய்திருக்கிறார்கள்.

என்ன செய்யப் போகிறோம் நாம் என்றோ, இது ஒரு ஜனநாயகச் சமூகத்திற்கு விடுக்கப்பட்ட சவால் என்றோ வழக்கமான சொற்களோடு இக்கட்டுரையை முடிக்க விரும்பவில்லை.

- யுவபாரதி

January 28, 2014

கனவுகள் சுமந்து வனம் திரிபவன்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்துள்ள கோழி குத்தும் மலையைப் பார்த்த வண்ணம் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ரகசியனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு ‘வண்ணங்களை விழுங்கிப் பெருத்திருக்கும் இருட்டு’. இவரது முந்தைய தொகுப்பான ‘என் மாமிசத்தைப் பிடுங்கிப் பசியாறும் சைவம்’ என்பதைப் போலவே இரு எதிர்வுகளைக் கொணர்ந்து நம்முன் நிறுத்துகிறது இத்தலைப்பும். மானுடத்தின் ஒரு பகுதியை விழுங்கி இன்னொன்று ஜீவிக்கிறது என்கிற அரசியல் சொல்லாடலைத் தாங்கி நிற்கிறது.

இவரது முந்தைய தொகுப்பு பெற்றிருக்க வேண்டிய கவனத்தை நம் தமிழ்ச் சூழலில் போதிய அளவில் பெறவில்லை. உள்ளீடற்ற ஒன்றைக் கூட ஊதிப் பெரிதாக்கும் வித்தை தரித்த ஜால ஊடகங்கள் உள்வலிமை பெற்ற ஒன்றை கவனியாது கடப்பதையும் கடமையாகக் கொண்டுள்ளன எனலாம். நுகர்வுப் பண்பாட்டின் ஒரு பகுதியாக நூல்களும் பண்டங்களாகி விட்ட நிலையில் விளம்பர உத்திகளே எதையும் தீர்மானிக்கின்றன.

‘வண்ணங்களை விழுங்கிப் பெருத்திருக்கும் இருட்டு’ எனும் ரகசியனின் இத்தொகுப்பு நான்கு பிரதான வெளிப்பாடுகளின் பற்பல பதிவுகளைக் கொண்டது. இயற்கையோடு இயைந்த கவிமனம், அது மாநகரப் புலப்பெயர்வால் உணரும் இறுக்கம், கட்டுப்பாடுகளை மறுத்து முன்னேகும் அதன் வேட்கை, ஒடுக்கப்பட்டோர் வாழ்வின் நெருக்கடி உணர்ந்து அது கொள்ளும் பெருங்கோபம் (பிரமிளின் வார்த்தையில் சொன்னால் ஆத்மரோஷம்).

***

தனிமனித வாழ்வு இயற்கையின் ஒவ்வோர் அங்கத்தோடும் தான் கொள்ளும் இயைபை அல்லது இயற்கை தனக்குள் கிளர்த்தும் நெருக்கத்தை மொழிவழி வெளிப்படுத்துகின்றன பல கவிதைகள்.
குடிப்பெயர்ச்சியால் ஊரமைத்து வாழ்கிறான் மனிதன். அவன் வருகைக்கு முன்பே, பின் உருக்கொள்ளும் ஊருக்கும் அடையாளமாய் இருப்பவை மலைகள். அவ்வகையில் தன் ஊருக்கு அடையாளமாய் நிற்கும் கோழி குத்து மலையைப் பற்றிய இருவேறு கவிதைகள் முக்கியமானவை.
ஒரு குடியின் பல தலைமுறைகளின் மனதில் நிலைகொண்டிருக்கும் ஒரு மலையின் பேரிருப்பைச் சொல்லவரும் கவி, தன்பாட்டன் முப்பாட்டன் காலந்தொட்டு தன் தகப்பன், தான் என்று வழிவழியாகத் தமக்கு, தன் கொண்டையின் மேல் நிலவை அமர்த்தி அழகு காட்டும் இம்மலை, தன் குழந்தையின் குழந்தைகளுக்கும் அப்படி அழகு காட்டும் என்கிறார் (கோழி குத்தும் மலை). நடப்பு காலத்து மலைவிழுங்கிகளின் மனதை அம்மலை உறுத்தாதவரை சாத்தியமே இது.

சிரமப்பட்டு எட்டிய அம்மலையின் உச்சியிலிருந்து கீழ்நோக்குகையில் அது “பள்ளங்களைப் போல் உயரங்களும் ஆபத்தானவை” என்று சொல்லித் தருவதாய்ச் சொல்வது வேறு தளங்களுக்கு நகர்த்துகிறது (உயரங்களும்).
பருவத்திற்குப் பிறகு வெட்டிக் கொள்ளலாம் எனத் தான் சொல்லியும் கனிதொங்கும் கோணக்காய் மரத்தை வெட்டிவிடுகிறாள் அம்மா. “கனிகொறிக்க வரும் குருவிகளுக்கு / என்ன சமாதானம் சொல்லி அனுப்புவேன்?” எனத் தவிக்கும் உளநிலை ரகசியனுடையது (குருவிக்குச் சமாதானமில்லை). இதே உளநிலை மண்விட்டுப் பிரிய மறுக்கும் வேர்களைச் சொல்லும் கவிதையிலும் வெளிப்படுகிறது (மரம்).

***

இயற்கையோடு கலந்துணரும் காலத்தில் பல தனிமனிதத் துயர்களை உள்வாங்கி இலகுவாக்குகிறது இயற்கை. வாழ்வு தன்மையமாயச் சுருங்குகையில் தனக்கே தான் சுமையாகிறது. இதை ரகசியனுக்கு மாநகரம் கதறக் கதறக் கற்றுத் தருகிறது.
தனிமனித மற்றும் சமூகவாழ்வு சார்ந்த துன்பங்கள் பல இருப்பினும், இயற்கையோடும் உறவுகளோடும் இயைந்த தன் கிராம வாழ்வின் மனநெருக்கத்தை வாஞ்சையோடு உள்வைத்த கவிமனம், பணிநிமித்தம் வந்து சேர்கிற மாநகரத்தில் துய்க்க நேரும் ஒட்டுறவற்ற தன்மையும் அந்நியமாதலும் பற்றி இவரது பல கவிதைகள் பேசுகின்றன.

நகர நிலவைப் பாடுபொருளாய்க் கொண்ட ஒரு கவிதை இப்படிச் சொல்கிறது. “என் மலையின் பின்னால் / தவழ்ந்திருந்த நிலவினை / யாருமற்ற இம்மாநகர வானில் / யாரோ விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள்” (நானற்ற பொழுதில் உதிரும் நட்சத்திரம்). ‘யாருமற்ற மாநகரம்’ எனும் சொல் அடையாளமின்மை, கவனப்பாடின்மை, பொருள்வயின் விரைவு என்று நகரும் மாநகர வாழ்வில் அவர் உணரும் வெறுமையை உணர்த்துகிறது. செடிக்கு ஆதாரமான வேர்களை விட்டுவிட்டு அதன் மேல் வெளித் தெரியும் இலைகளுக்கு நீரூற்றும் மாநகரம் என்றும் ஒரு கவிதையில் வருகிறது. கவிதையின் காட்சிப்படுத்தல் என்பதைக் கடந்தும் மாநகரத்தின் நுண்அரசியலை அடையாளம் காட்டும் படிமம் அது. (இலைகள் மேல் நீரூற்றும் ஊர்).

வானம் செத்துவிட்ட ஊரின் மேல் பறக்கும் விமானம், பள்ளிகள் விட்டபிறகும் எங்கோ போய்வரும் பிள்ளைகள், சாலையிலேயே பிளாஸ்டிக்கைப் போர்த்துக்கொண்டு உறங்கும் ஒரு மனிதன், நெரிசல் மிக்க சாலையில் பேருந்தின் பாதியளவுள்ள காரில் குற்றவுணர்வற்று நகரும் இன்னொரு மனிதன் எனும் ரகசியனின் காட்சிப்படுத்தல்கள் அவருக்கு மாநகரம் ஏற்படுத்தும் விலகலையும் அவநம்பிக்கையையும் திரும்பத் திரும்பப் பேசுகின்றன.

***

குடும்பம், சமூகம், சமயம், அரசு முதலான சமுதாய நிறுவனங்கள் உருவாக்கம் அகக்கட்டுமானங்களை மீறி தன்னியல்பில் நிலைகொள்ளத் தவிக்கும் வேட்கையும், அதனால் அதுபடும் வேதனையும், எண்ணற்ற படிமங்களாயும் குறியீடுகளாயும் ரகசியனின் கவிதைகளில் வெளிப்படுகிறது. தான் ஆக்கமுயலும் உலகத்தையும் காட்டுகிறது.
தோலுரித்த பசுவை வேட்டையாடும் நாய்கள், போதி மரத்தை மேயும் ஆடுகள், ஒவ்வொரு நாளும் உருகிக் கொண்டிருக்கும் உயிர், பெருஞ்சூரியனிடமிருந்து ஆறுதல் தரும் சிறுமலர், பெயர் சூட்டாத ஆயிரம் பூக்கள் கொண்ட மலை, மழையைச் சொட்டவிட்டு அழகாகக்கும் ஓரிலை, பிரிவில் கசிந்த கண்ணீர் நிரம்பிய இளநீர் முதலான பல படிமங்கள் எழுப்பும் உணர்வுகள் இவரது கவித்துவத்தின் வலு உணர்த்துபவை.

ஒரு மனிதனின் தனிப்பயணம் அளிக்கும் நிறைவே, அதன் தடைகளைக் கடக்கவும் உந்துகிறது. “எல்லோரும் போல் இல்லாதிருப்பது / சிக்கல் நிறைந்த பயணம் / எல்லோரும் போல இல்லாத சிலரில் / சேருபவன் நான் / குடிசைகளிலிருந்து மீறிய நான் / வனம் புகுந்து வாழ்கிறேன் / பின் புலிக்கு இரையாகியோ / பழம்பருவம் கண்டோ சாவேன்” என்கிறார் ரகசியன் (சாவேன்).
***
‘ஒரு சமுதாயம் வாழ்கிறதா இல்லையா என்பது இங்கு பிரச்சனை அல்ல. என்ன நிலையில் வாழ்கிறது என்பதே முக்கியம்’ என்பார் டாக்டர் அம்பேத்கர்.

பள்ளர், பறையர், அருந்ததியர் எனும் இனக்குழுப் பெயர்களாயினும், அந்த்யஜர் எனும் சமற்கிருதச் சொல், அதற்கிணையான கடைசியர் எனும் தமிழ்ச் சொல், இராமானுஜரின் திருக்குலம், காந்தியின் அரிஜனர், காலனி, ஷெட்யூல்டு காஸ்ட்ஸ் எனும் ஆங்கிலச் சொற்கள், அரசியல் வெளியில் உருக்கொண்டு ஆதி திராவிடர், தலித் எனும் சொற்களாயினும், ஒரே வித ஒதுக்குதலோடுதான் பயன்படுத்துகிறது பெருஞ்சமூகம். எம்மொழிச் சொற்களாயினும் இது நேர்கிறது.
ஒடுக்கப்பட்டோர் வாழ்வின் சமூக நெருக்கடி, அதன் விடுதலைக் குரலில் ஒலிக்கும் சமத்துவ நோக்கு இவற்றை உள்ளார்ந்த வீச்சுடன் பதிவு செய்கின்றன ரகசியனின் கவிதைகள்.

தாமிரபரணி, கீழவெண்மணி, பாப்பாப்பட்டி படுகொலைகளையும், திண்ணியம் வன்கொடுமையையும் குறிப்பாகச் சுட்டி, இயற்கையின் மாசுபாடுகள் குறித்து வாய்கிழியப் புலம்பும் பலருக்கு, மேற்காணும் இழிசெயல்கள் மேல் காறி உமிழ எச்சில் ஏன் இல்லை? என்று கேட்கும் ரகசியன், அதனால் ‘உங்களோடு சேர்ந்து பல்வேறு கேளிக்கைகளில் ஈடுபட்டாலும், “நீங்களாக நான் எப்போதும் ஆனதில்லை” என்கிறார் (ஒரு வரியேனும்).

நிலவு, நட்சத்திரம், மேக விலங்குகள் என இயற்கையின் அங்கங்கள் சுட்டி “இவையெல்லாம் / உனக்குப் போலவேதான் எனக்கும் / இந்நிலம்தான் / விண்மீனை விட தூரமிருக்கிறது / எனக்கு” எனும் கவிதை (தூரம் இருக்கும் நிலம்) நம் சமூகத்தின் உள்ளார்ந்த இயல்பாகவே கரடு தட்டி நிலைபெற்றுவிட்ட சாதியம் யாவர்க்கும் பொதுவான நிலத்தை பிறப்பு வழி எல்லைகட்டி ஒதுக்கி வைப்பதன் அவலத்தையே மொழிவழி காட்டுகிறது.
சாதிய இந்து மனம் தலித்துகளின் உரிமை வேட்கையை ஏற்பதில்லை என்பதோடு ஒதுக்குவதாலும் ஒடுக்குவதாலும் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. “உன்னை முள்போல் / குத்துகிறது என் புன்னகை / உன் நிம்மதியைக் குலைக்கிறது / என் தூக்கம் / உனக்கு நோயை உண்டாக்குகிறது / என் ஆரோக்கியம் / கண்ணீரோடும் / பசியோடும் / நான் கூனிக்குறுகி ஏவல் / செய்து கொண்டு / இருக்கவே விரும்புகிறது / உன் மனம்” (விரும்புகிறது). இன்று வரை தருமபுரிகளை நிகழ்த்துவது எது என்பதைப் பேசுகிறது இக்கவிதை.

எப்போதும் தங்கள் ஆதிக்கம் நீடிக்கவே விரும்பும் பார்ப்பனர்களைப் பற்றிப் பேசுமிடத்து, ‘சூத்திரர்கள் பார்ப்பனர்களைக் கீழே தள்ள விரும்பினாலும், தீண்டப்படாதவர்கள் தங்களது நிலைக்கு உயர்ந்து வருவதை விரும்பவில்லை’ என்பதையும் குறிப்பிடுவார் டாக்டர் அம்பேத்கர். முதுகுளத்தூர் முதல் தருமபுரி வரை ஒடுக்கும் சாதிகள் வேறுவேறு எனினும் ஒடுக்கப்படுவோர் தலித்துகளே.

ஒடுக்கப்பட்டோர் விடுதலையின்பால் நம்பிக்கை கொண்ட ரகசியனின் கவிதைகளில் வண்ணங்களை விழுங்கிப் பெருத்திருக்கும் இருட்டு, அறிவின் வாளில், உடைபடும் அடைப்புகள், திருடப்பட்டிருக்கும் உலகு, கொடும் விலங்கொன்று முதலான கவிதைகள் முக்கியமானவை.

***

நல்ல மொழியாற்றலும் அறச் சீற்றமும் கொண்ட ரகசியனிடம் தன் சொல்முறையில் சொற்சிக்கனமும் செறிவும் கூடிய பல கவிதைகளின் மூலம், தன் இருப்பையும் இயக்கத்தையும் வெளிப்படுத்துவார் எனும் நம்பிக்கையைத் தருகிறது ‘வண்ணங்களை விழுங்கிப் பெருத்திருக்கும் இருட்டு’.

-    யுவபாரதி


(நவம்பர் 9, 2014 : வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் அழகிய பெரியவன் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் சுருக்கம்.)