Showing posts with label பணிக்கர். Show all posts
Showing posts with label பணிக்கர். Show all posts

January 22, 2012

"புதிய தலைமுறை" இப்படிச் செய்யலாமா?

அன்புள்ள புதிய தலைமுறை இதழாசிரியர் திரு.மாலன் அவர்களுக்கு,


வணக்கம்.


இந்த வாரத்தைய "புதிய தலைமுறை" இதழ் (26 ஜனவரி 2012, மலர் 3, இதழ் 18) கண்டேன். "இழந்தது தேவிகுளம், பீரிமேடு மட்டும்தானா?" என்ற கவர் ஸ்டோரி படித்தேன். வரவேற்கத்தக்க கட்டுரை அது. 


ஆனால், அது தொடர்பாக, "பணிக்கரின் ஆவேசம்" என்ற சிறு கட்டுரை, பெட்டிச் செய்தி அளவில் (பக்கம் 12) வெளியாகியிருக்கிறது. படித்ததும் நான் அதிர்ந்து போனேன். "பணிக்கர் என்றொரு நடுவர்" என்ற தலைப்பில் 2011 டிசம்பர் 16 அன்று எனது வலைப்பூவிலும், முகநூலிதும் நான் எழுதி, பதிவிட்ட சிறு கட்டுரை அது. முகநூலில் பலராலும் படிக்கப்பட்டு, பின்னூட்டமிடப்பட்ட பதிவு அது. ஆனால், தலைப்பு மட்டும் மாற்றப்பட்டு ஓர் எழுத்தும் பிசகாமல் அப்படியே தங்கள் இதழில் வெளியாகியிருக்கிறது. ஆனால், அதன் கீழ் எனது பெயரோ, வலைப்பதிவு முகவரியோ குறிப்பிடப்படவுமில்லை.


கீழ்க்காணும் எனது வலைப்பூ, முகநூல் சுட்டிகளைப் பாருங்கள் :



நான் எழுதிய கருத்தின் அடிப்படையில் வேறு விதமாக தங்கள் இதழ் சார்ந்த எவராலேனும் எழுதப்பட்டிருந்தால் அது வேறு. எழுத்து பிசகாமல் அப்படியே எனது அச்சிறு கட்டுரை Cut and Paste செய்யப்பட்டுள்ளது.


எனது ஒரு சிறு பதிவைத் தங்களின் இதழில் வெளியிடுகிறீர்கள் எனில் அதன் கீழ் எனது பெயரைக் குறிப்பிடுவதுதானே சரி? அதே பதிவைத் தலைப்பு மாற்றி அப்படியே பெயர் ஏதுமின்றி வெளியிடுவது என்பது, அது ஏதோ தங்கள் பத்திரிகையில் பணியாற்றும் யாரோ எழுதியதாகத்தானே அர்த்தப்படும்?


நீங்கள் இதழாசிரியர் மட்டுமல்ல. நீங்களே ஓர் எழுத்தாளரும் கூட. எனில், இச்செய்கை உண்மையில் எழுதிய என்னை எப்படி காயப்படுத்தும் என்பதை நீங்களே அறிவீர்கள்.

மின் ஊடகத்தில் வாசிப்பவர்கள் அச்சு ஊடகத்திலும் வாசிக்கப் போகிறார்களா? என்று இதைச் செய்தவர்கள் எண்ணியிருப்பார்களெனில் அது தவறு. 

நல்ல வாசகர்கள் பலரும் விரும்பிப் படிக்கும் வகையில் வெளிவரும் தங்கள் இதழில் இவ்விதம் நேர்ந்திருப்பது உண்மையில் வருத்தமளிக்கிறது. "புதிய தலைமுறை"யில் வெளியாகும் பல படைப்புகள், கட்டுரைகள் மீதான நம்பகத் தன்மையையும் ஐயுற வைக்கிறது.

இச்செய்கைக்குப் "புதிய தலைமுறை"யின் அடுத்த இதழிலேனும் வருத்தம் தெரிவிக்கப்படுமானால் திருப்தியுறுவேன்.

அன்புடன்,

யுவபாரதி.

22.01.2012

December 16, 2011

பணிக்கர் என்றொரு நடுவர்

மொழி வழி மாநிலம் கோரும் கிளர்ச்சிகள் இந்தியத் துணைக்கண்டம் முழுதும் கொழுந்துவிட்டு எரிந்த பொழுது, ஜஸ்டிஸ் சையத் பசல் அலி என்பவர் தலைமையில் மாநில மறுசீரமைப்புக் கமிஷனை அமைத்தார் பிரதமர் நேரு. இக் குழுவில் சர்தார் கே.எம்.பணிக்கர், பண்டிட் எச்.என்.குன்ஸ்ரு ஆகியோர் உறுப்பினர்கள்.

சர்தார் கே.எம்.பணிக்கர்
தம் மாநிலமான பீகார் (பீகாருக்கும் மேற்கு வங்கம், ஒரிசாவுக்குமான எல்லைகள்) தொடர்பான விவாதங்களின் போது, நடுவர் நிலையில் இருக்கும் தான் இதில் கலந்துகொள்வது தார்மீக நியாயம் இல்லை என்று நகர்ந்தார் பசல் அலி. ஆனால், தமிழக-கேரள எல்லைகள் தொடர்பான விவாதங்களில் பங்கேற்றதோடு அல்லாமல், தேவிகுளம்-பீர்மேடு வட்டங்களைக் கேரளத்துடன்தான் இணைக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார் பணிக்கர் (1955).

ம.பொ.சி. "எனது போராட்டம்" என்ற தம் நூலில் பின்வரும் நிகழ்வைக் குறிப்பிடுவார்:

"நான் பசல் அலி கமிஷனைப் பேட்டி கண்ட போது, அக்கமிஷன் அங்கத்தினரான கே.எம்.பணிக்கர் என்னிடம் சுமார் அரைமணி நேரம் உரையாடினார், இல்லை, திரு-கொச்சி ராஜ்யத்திலுள்ள தமிழ்த் தாலுக்காக்கள் பற்றி என்னுடன் வாய்ச் சண்டை நடத்தினார். தேவிகுளம், பீர்மேடு தாலுக்காக்களைத் தமிழகத்துடன் இணைக்குமாறு தமிழரசுக் கழகம் கோருவது அநியாயமென்றும், கமிஷன் அதனை ஏற்கமுடியாது என்றும் ஆவேசமாகக் கூறினார். அவரது போக்கு எனக்கு வியப்பைத் தந்தது.
ம.பொ.சி.
அதனால், நான் "தாங்கள் மலையாளிகள் சார்பில் என்னுடன் வழக்காடுகிறீர்களா? அல்லது கமிஷன் உறுப்பினர் என்ற வகையில் என்னை விசாரணை நடத்துகிறீர்களா?" என்று கேட்டேன். இதன் பின்னர் பணிக்கரின் ஆவேசம் தணிந்தது.

தமக்கு ஏற்பட்ட ஆவேசத்திலே தம்மை மறந்தவராகி, தேவிகுளம் - பீர்மேடு பகுதியிலே தமக்குச் சொந்தமான தோட்டங்கள் இருப்பதாகவும் பணிக்கர் கூறினார். அதை நான் எப்படி தமிழ்நாட்டிடம் விட்டுவிட முடியும் என்றும் கேட்டார்.

அத்துடன் நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் தாலுகாவுக்காகவும் பணிக்கர் என்னுடன் வாதாடினார். "

- யுவபாரதி